சென்னை : ஐபிஎல் மினி ஏலம் வரும் டிசம்பர் 19ஆம் தேதி நடைபெறுகிறது. அதற்கு முன்பு ஒரு வாரம் வரை ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை மற்ற அணிகளிடம் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம்.
இந்த வகையில் குஜராத் அணி ஹர்திக் பாண்டியாவை தக்க வைத்துக் கொண்டதாக அறிவித்த நிலையில் மும்பை அணி அவரை வெறும் பணம் கொடுத்து வாங்கியது.

இந்த நிலையில் தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் தனது சமூக வலைத்தளத்தில் எந்த அணி யாரை வாங்குகிறது குறிப்பிட்ட வீரரை ஏன் வாங்க வேண்டும் என்பது குறித்து பல வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக இருக்கும் சஞ்சு சாம்சனை, சிஎஸ்கே அணி டிரான்ஸ்பர் முறையில் வாங்க இருப்பதாகவும், அதன் மூலம் சஞ்சு சாம்சனை கேப்டனாக்க சிஎஸ்கே அணி முயற்சி செய்ததாக அஸ்வின் கூறியதாகவும் செய்தி வெளியானது.
மேலும் அதில் ராஜஸ்தான் மீதான விசுவாசத்தால் சஞ்சு சாம்சன் அந்த வாய்ப்பை வேண்டாம் என்று நிராகரித்து விட்டதாக அஸ்வின் தெரிவித்தார் என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்சமயம் இந்த மாற்றம் நடைபெறவில்லை என்றாலும் எதிர்காலத்தில் நிச்சயமாக இதற்கு வாய்ப்பு இருப்பதாக அஸ்வின் கூறியதாக சமூக வலைத்தளத்தில் செய்திகள் வெளியானது.
ராஜஸ்தான் அணியில் தான் அஸ்வின் இருக்கிறார் என்பதால் அவர் உண்மையை கூறிவிட்டார் என்று சமூக வலைத்தளத்தில் செய்திகள் வெளியானதை எடுத்து ரசிகர்கள் பலரும் இதனை கொண்டாடினர். சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்கு வந்தால் தோனிக்கு மாற்றுவீரரான விக்கெட் கீப்பர் கிடைப்பார் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து இருந்தார்கள்.
இந்த நிலையில் இந்த செய்தி குறித்து கருத்து தெரிவித்துள்ள அஸ்வின் தான் இப்படி ஒரு விஷயத்தை சொல்லவே இல்லை என்றும் பொய் செய்திக்கு ஏன் எனது பெயரை பயன்படுத்துகிறீர்கள். அவ்வாறு செய்ய வேண்டாம் என்றும் கூறியிருக்கிறார். இதனால் சஞ்சு சாம்சன் சிஎஸ்கே வருவார் என எதிர்பார்த்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். சமூக வலைத்தளத்தில் இது போன்ற போலி செய்திகள் பலவும் வைரலாகி வரும் நிலையில் இது உண்மையா இல்லையா என்பதை mykhel tamil செய்தி தளத்தை படித்து ரசிகர்கள் தெரிந்து கொள்ளலாம்.