அகமதாபாத்: ஒரு அணிக்கு கேப்டனாக நியமிக்கப்படும் போது பல்வேறு பொறுப்புகள் கூடுதலாக நமக்கு வந்துவிடும் என்று குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் அறிமுகமான முதல் சீசனிலேயே சாம்பியன் பட்டத்தை வென்று அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது குஜராத் டைட்டன்ஸ் அணி, அதன்பின் 2வது சீசனில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது. இதனால் வரும் காலங்களில் குஜராத் அணி சென்னை, மும்பை அணிகளுக்கு இணையான அணியாக இருக்கும் என்று கருதப்பட்டு வந்த நிலையில், திடீரென அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு இடம்பெயர்ந்துள்ளார்.

இதனால் குஜராத் அணியின் கேப்டனாக இளம் வீரர் சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆர்சிபி அணியின் கேப்டனாக விராட் கோலி 22 வயதில் பொறுப்பேற்ற நிலையில், குஜராத் அணியின் கேப்டனாக சுப்மன் கில் 24 வயதில் பொறுப்புக்கு வந்துள்ளார். இதனால் சுப்மன் கில் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அவரின் கேப்டன்சி எப்படி இருக்கும், சீனியர் வீரர்களை எப்படி அணுகுவார், அழுத்தத்தை எப்படி சமாளிப்பார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
இந்த நிலையில் குஜராத் அணியின் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ள சுப்மன் கில் பேசுகையில், ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்ட போது எனக்கு 7 வயது இருக்கும். குழந்தையாக இருந்து ஐபிஎல் தொடர் பார்த்து வளர்ந்த எனக்கு, கிரிக்கெட்டர் ஆக வேண்டும் என்பதே கனவாக இருந்தது. அதிலும் ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும், அணிக்கு தலைமையேற்க வேண்டும் என்பதெல்லாம் கிரிக்கெட் ஆடும் ஒவ்வொருவருக்கும் கனவாக தான் இருந்திருக்கும்.
என்னை பொறுத்தவரை கேப்டன்சி பொறுப்பை ஏற்கும் போது நமக்கு கூடுதல் பொறுப்புகள் வந்துவிடும். அர்ப்பணிப்பு, கட்டுப்பாடுடன் இருந்து கடின உழைப்பை கொடுக்க வேண்டும். முக்கியமாக அணிக்கு விஸ்வாசமாக இருக்க வேண்டும். நேர்மையாக இருக்க வேண்டும் இதெல்லாம் கேப்டனுக்கான தேவைகள் தான். நான் மிகச்சிறந்த கேப்டன்களுக்கு கீழ் விளையாடி இருக்கிறேன்.
அவர்களிடம் இருந்து நிறைய கற்றுள்ளேன். அந்த கற்றல் அனுபவம் ஐபிஎல் தொடரில் எனக்கு உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன். அதேபோல் குஜராத் அணியில் ஏராளமான கேப்டன்கள் இருக்கிறார்கள். கேன் வில்லியம்சன், ரஷீத் கான், ஷமி, மில்லர், சாஹா உள்ளிட்டோர் இருக்கிறார்கள். அதனால் ஏராளமானவற்றை கற்க முடியும் என்று ஆவலாக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.