சென்னை : 2024 ஐபிஎல் தொடரில் பும்ரா அணி மாறும் மனநிலையில் இருக்கிறார். அதிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அணி மாறுவார், தோனி அவரை எளிதில் விட்டு விட மாட்டார் என ரசிகர்கள் ஆதாரத்துடன் கூறி வருகின்றனர்.
பும்ரா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில சமயம் மௌனமே சிறந்த பதில் என ஒரு பதிவை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து ரசிகர்கள் பும்ரா இந்த பதிவின் மூலம் என்ன சொல்ல வருகிறார் என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்ட போது அதிரடி விஷயம் ஒன்று வெளியானது.
பும்ரா தன் சமூக ஊடகங்களில் மும்பை இந்தியன்ஸ் அணியை பின் தொடர்வதை நிறுத்தி இருக்கிறார். அவர் மும்பை இந்தியன்ஸ் அணியை அன்ஃபாலோ செய்து விட்டார் என்பதை அறிந்த உடன் அவர் ஐபிஎல் தொடரில் அணி மாறப் போகிறார் என்ற தகவல் ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது.

அத்துடன் பும்ரா திடீரென தோனியை ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் பின் தொடரத் துவங்கி இருக்கிறார் என்பதையும் கண்டறிந்த ரசிகர்கள், அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தான் மாறப் போகிறார். சிஎஸ்கே அணி இப்படி ஒரு வாய்ப்பை விடாது. அதிலும் பும்ரா தோனியை பின் தொடர்கிறார் என்றால் அவருடன் தொடர்பில் இருக்கிறார் என்றே அர்த்தம். தோனி பும்ராவை விட்டு விட மாட்டார். அவரை தட்டித் தூக்கி விடுவார் என கூறி வருகின்றனர்.
ஐபிஎல் அணிகளைப் பொறுத்தவரை தங்கள் அணி வீரர் என ஒருவரை நம்பி விட்டால் முடிந்த வரை அவரை அணி மாறாமல் தங்கள் அணியில் ஐந்து, ஆறு ஆண்டுகள் வைத்துக் கொள்ளக் கூடிய அணிகள் என்றால் அதில் ஒன்று சென்னை சூப்பர் கிங்ஸ், மற்றொன்று மும்பை இந்தியன்ஸ்.
ஆனால், அப்படிப்பட்ட மும்பை இந்தியன்ஸ் அணியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஹர்திக் பாண்டியா தனக்கு கேப்டன் பதவி அளித்த குஜராத் டைட்டன்ஸ் அணியை தூக்கி எறிந்து விட்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாறி இருக்கிறார். அவருக்கு மும்பை அணியில் கேப்டன் பதவி அளிக்கப்படும் என கூறப்படுகிறது. ரோஹித் சர்மா இந்த ஆண்டோ அல்லது அடுத்த ஆண்டோ கேப்டன் பதவியில் இருந்து விலகுவார் என்றும் கூறப்படுகிறது.
ஆனால், அடுத்த மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக பும்ரா தான் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்புக்கு இடையே பாண்டியா கேப்டன் ஆவார் என்ற பேச்சு அடிபட்டு இருப்பதால், பும்ரா அதிருப்தி அடைந்து தான் மும்பை இந்தியன்ஸ் அணியை அன்ஃபாலோ செய்து இருக்கிறார் என ரசிகர்கள் கூறுகின்றனர்.
மேலும், மும்பை அணிக்கு அடுத்து வீரர்களை சரியாக கையாளும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு செல்லும் பொருட்டே பும்ரா தோனியை பின்தொடர்ந்து இருக்கிறார் என்கிறார்கள். ஐபிஎல் அணிகள் தங்களின் இறுதி அணிப் பட்டியலை வெளியிட்டாலும், வீரர்களை விடுவிக்காமல் தங்களுக்குள் அணி மாற்றம் செய்து கொள்ள இன்னும் ஒரு வாரம் கால அவகாசம் உள்ளது. அதனால், தற்போது 12 கோடி மதிப்பு கொண்ட பும்ராவை சிஎஸ்கே அணி நேரடியாக வாங்க வாய்ப்பு உள்ளது.