மும்பை : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் சிஎஸ்கே அணி 14 கோடி ரூபாய் கொடுத்து வாங்கிய நியூசிலாந்து வீரர் டேரல் மிட்செல் தொடர்ந்து சொதப்பி வருவது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்திருக்கிறது ஐபிஎல் மினி ஏலத்தில் சிஎஸ்கே அணி நியூசிலாந்து வீரர்களை குறி வைத்து வாங்கியது.
இதில் டேரல் மிட்செல், சிஎஸ்கே அணியின் மிகப்பெரிய சொத்தாக பார்க்கப்பட்டார். காரணம் ஐசிசி உலக கோப்பையில் டேரல் மிட்செல் 500 ரன்கள் மேல் அடித்தார். குறிப்பாக சுழற் பந்துவீச்சை அபாரமாக எதிர்கொண்டு நேராக சிக்சர் அடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

இதனால் டேரல் சிஎஸ்கே அணிக்கு நல்ல வீரராக திகழ்வார் என எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக சிஎஸ்கே அணி பல கோடி ரூபாய் கொடுத்து ஒரு வீரரை சாதாரணமாக வாங்காது. அப்படி டேரல் மிட்செல்லுக்கு செலவழிக்கிறது என்றால், அவர் நிச்சயம் ஸ்டார் வீரராக இருப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
இந்த நிலையில் ராயுடுவுக்கு மாற்றுவீரராக டேரல் மிட்செல் களமிறங்கினார். எனினும் உலக கோப்பையில் அவர் ஆடிய ஆட்டத்தை ஐபிஎல் தொடரில் ஒரு முறை கூட ரசிகர்கள் பார்க்கவில்லை. டேரல் மிட்செல் ஒரு நாள் மற்றும் டெஸ்டில் விளையாடுவது போல் பந்துகளை எதிர்கொள்ள தடுமாறினார். மேலும் சில போட்டிகளில் ஓடி ஓடி தான் ரன்களை அவர் சேர்க்கிறார்.

அந்த வகையில் இன்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே நல்ல நிலையில் இருந்தது. அப்போது களத்திற்கு வந்த டேரல் மிட்செல் அதிரடியாக ஆடி இருந்தால் சிஎஸ்கே அணி 240 ரன்களுக்கு மேல் சென்று இருக்கும். ஆனால் டேரல் மிட்செல் வெறும் சிங்கிள்ஸ் மட்டும் தான் ஓடி எடுத்தார். 14 பந்துகளை எதிர்கொண்ட அவர் ஒரே ஒரு பவுண்டரி மட்டும்தான் எடுத்தார்.
டேரல் மிட்செல் ஆட்டம் இழந்த பிறகு தான் தோனி களத்திற்கு வந்து அதிரடியாக மூன்று சிக்ஸர்களை அடித்தார். இதனால் தான் ஸ்கோர் 206 என்ற இலக்கை எட்டியது. இப்படி மிட்செல் சொதப்புவதால் அவரை ஏன் அணியில் எடுத்தீர்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு பதில் தோனியாவது களத்திற்கு முன்பே வந்து ரன்கள் சேர்த்திருக்கலாம் என்றும் ரசிகர்கள் கூறுகின்றனர். சமீர் ரிஸ்வி என்ற இளம் வீரர் அணியில் இருக்கும்போது, டேரல் மிட்செலுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படுவது ஏன் என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.