ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தங்களுடைய பரம எதிரியான மும்பை அணியை சிஎஸ்கே அணி அவருடைய சொந்த மண்ணிற்கே சென்று வீழ்த்தி இருக்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 29 வது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனை அடுத்து தொடக்க வீரராக களமிறங்கிய ரகானே,ஐந்து ரன்களிலும் ரச்சின் ரவீந்திரா 21 ரன்களிலும் ஆட்டமிழக்க கேப்டன் ருதுராஜ் அபாரமாக நின்று அதிரடி காட்டினார். இதன் மூலம் சிஎஸ்கே அணி சரிவிலிருந்து மீண்டது.

40 பந்துகளை எதிர்கொண்ட ருதுராஜ் 69 ரன்கள் சேர்த்தார். இதில் 5 சிக்சர்கள் ஐந்து பவுண்டரிகள் அடங்கும். மறுபுறம் அதிரடி நட்சத்திர வீரர் சிவம் துபே நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கடைசிவரை ஆட்டமிழக்காமல் நின்ற அவர் 38 பந்துகளை எதிர் கொண்டு 66 ரன்கள் சேர்த்தார். பத்து பவுண்டரிகள், இரண்டு சிக்ஸர்கள் இந்த இன்னிங்ஸில் அடங்கும்.
ஒரு கட்டத்தில் டேரல் மிட்செல் பவுலர்களை அடிக்க முடியாமல் 14 பந்துகளை எதிர்கொண்டு 17 ரன்கள் மட்டுமே சேர்த்து ஆட்டம் இழந்தார். இதனால் சிஎஸ்கே அணி 190 கூட தொடாது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி கட்டத்தில் களமிறங்கிய முன்னாள் கேப்டன் தோனி ஹாட்ரிக் சிக்ஸர் அடித்து சிஎஸ்கே அணியை 206 ரன்களுக்கு கொண்டு சென்றார்.
இதனை அடுத்து 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மாவும், இசான் கிஷனும் பட்டையை கிளப்பினர். 15 பந்துகளில் 23 ரன்கள் சேர்க்க, கடந்த போட்டியில் வெறித்தனமாக ஆடிய சூரியகுமார் யாதவ் இன்றைய ஆட்டத்தில் முஸ்தஃபிசுர் ரஹ்மானின் அபார கேட்ச் ஆல் டக்அவுட் ஆகி வெளியேறினார்.
இதை அடுத்து ரோகித் சர்மாவும் திலக் வர்மாவும் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா 30 பந்துகளில் எல்லாம் அரைசதம் கடக்க, திலக் வர்மா ஐந்து பவுண்டரிகளை விரட்டி 20 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்தார். பதிரானா அபாரமான பந்து வீச்சால் திலக் வர்மா ஆட்டமிழக்க பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ஹர்திக் பாண்டியா 6 பந்துகளை எதிர் கொண்டு 2 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.
மும்பை அணியை காப்பாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட டிம் டேவிட் இரண்டு சிக்ஸர்களை அடித்த நிலையில் முஸ்தஃபீசுர் ரஹ்மானின் துல்லியமான பந்துவீச்சால் 13 ரன்களில் ஆட்டம் இழந்தார். இதேபோன்று ரோமரியோ செஃபர்ட் சிஎஸ்கே அணியை நொறுக்க போகிறார். ஆண்ட்டி கிளைமாக்ஸ் ஆக மாறப்போகிறது என்ற பயத்தில் ரசிகர்கள் இருந்தனர். ஆனால் பதிரானா தன்னுடைய அபார யாக்கரால் அவரை ஒரு ரன்னில் ஆட்டமிழக்க வைத்தார். இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. அபாரமாக பந்து வீசிய பதிரானா நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்ற ரோகித் சர்மா சதம் விளாசினார்.