சென்னை: ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் ஆஸ்திரேலியா அணி வீரர்களை ஏலத்தில் எடுக்க சிஎஸ்கே நிர்வாகம் தீவிரமாக இருப்பது தெரிய வந்துள்ளது.
ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 19ஆம் தேதி நடக்கவுள்ளது. இதனையொட்டி தக்கவைக்கப்பட்ட வீரர்கள் மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களை பட்டியலை அனைத்து அணிகளும் அறிவித்துள்ளன. அந்த வகையில் சிஎஸ்கே அணியை பொறுத்தவரை மொத்தமாக 8 வீரர்களை விடுவித்துள்ளது. குறிப்பாக கடந்த மினி ஏலத்தில் அதிக தொகை கொடுத்து வாங்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ் விடுவிக்கப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பென் ஸ்டோக்ஸ் மட்டுமல்லாமல், டுவைன் ப்ரிடோரியஸ், மகலா, ராயுடு, ஜேமிசன், சிசண்டா, சேனாபதி, பகவத் வர்மா, ஆகாஷ் சிங் உள்ளிட்டோரை விடுவித்துள்ளது. இருப்பினும் 6 வீரர்களை மட்டுமே சிஎஸ்கே அணி நிரப்ப வேண்டிய நிலை இருக்கிறது. சென்னை அணி தரப்பில் ஜெரால்ட் கோட்சியா, ஷாரூக் கான் உள்ளிட்ட வீரர்களை வாங்க முயற்சிக்கலாம் என்று பார்க்கப்படுகிறது.
அதேபோல் டேரல் மிட்சல் அல்லது ரச்சின் ரவீந்திரா உள்ளிட்ட வீரர்களையும் ஏலத்தில் வாங்க முயற்சிக்கும் என்று பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் பேசுகையில், 16 வருட ஐபிஎல் வரலாற்றில் ஒரேயொரு வீரரை மட்டுமே சிஎஸ்கே அணி டிரேட் செய்துள்ளது. அதேபோல் எந்த வீரரையும் சிஎஸ்கே அணி விட்டு கொடுத்ததில்லை.
கடந்த சில ஆண்டுகளாக அம்பாதி ராயுடுவுக்கு பேக் அப் வீரர்களை டிரேட் செய்ய விரும்பினோம். ஆனால் அது சரியாக அமையவில்லை. இந்த சீசனில் விடுவிக்கப்பட்ட வீரர்களை பொறுத்தவரை பென் ஸ்டோக்ஸை விடுவதா அல்லது தக்க வைக்கப்பதா என்று அதிகமாக ஆலோசனை செய்தோம். ஏனென்றால் இந்த சீசனில் மட்டும் அவர் இருக்க மாட்டார் என்று தெரிய வந்தது.
ஆனால் கேப்டன் தோனி மற்றும் பயிற்சியாளர் பிளெமிங் இருவரிடமும் ஆலோசனை செய்த பின், மினி ஏலத்தில் நல்ல தொகையுடன் பங்கேற்க வேண்டும் என்று முடிவு செய்து பென் ஸ்டோக்ஸை விடுவித்துள்ளோம். ஆஸ்திரேலியா அணியின் கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட், ஸ்டார்க் என்று ஏராளமான நட்சத்திர வீரர்கள் ஏலத்திற்கு வருகிறார்கள். அதேபோல் இந்திய இளம் வீரர்களை வாங்க ஆவலாக உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.