மும்பை : ஐபில் 2024 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தற்போது பெரிய சிக்கல் ஒன்று ஏற்பட்டிருக்கிறது. நடப்பு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வெறும் இரண்டு வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர்கள் தான் இருக்கிறார்கள்.
அதில் ஒன்று இலங்கை அணியின் பதிரானா, வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரஹ்மான் ஆவர். சிஎஸ்கே அணிக்காக விளையாடிய முதல் போட்டியிலே முஸ்தஃபிசுர் ரஹ்மான் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி நல்ல தொடக்கத்தை கொடுத்தார்.

எனினும் அதன் பிறகு பெரிய தாக்கத்தை முஸ்தஃபிசுர் ரகுமான் ஏற்படுத்தவில்லை என்றாலும் அவர் பதிரானாவுக்கு நல்ல துணையாக இருக்கிறார். இந்த இருவரையும் நம்பி தான் சிஎஸ்கே அணியின் வேகப்பந்து வீச்சு இருக்கிறது. இந்த நிலையில் முஸ்தஃபீசுர் ரகுமான் மே மாதம் முழுவதும் ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
மே மூன்றாம் தேதி வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஜிம்பாப்வே அணி t20 போட்டிகளில் விளையாடுகிறது. இந்த தொடர் மே 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதன் பிறகு முஸ்தஃபிசுர் ரஹ்மான் சிஎஸ்கே அணிக்கு விளையாடுவார் என்று முதலில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது வங்கதேச கிரிக்கெட் வாரியம் ஒரு ட்விஸ்ட் வைத்திருக்கிறது.
அதன்படி டி20 உலக கோப்பைக்கு முஸ்தபிசுர் ரஹ்மான் தேவைப்படுவார் என்பதால் அவரை மீண்டும் ஐபிஎல் தொடருக்கு அனுப்ப போவதில்லை என்று தெரிவித்துள்ளது. அதன்படி முஸ்தஃபீசுர் ரஹ்மான் மே ஒன்றாம் தேதி சிஎஸ்கே விளையாடும் போட்டியில் பங்கேற்க உள்ளார். அதன் பிறகு அவர் ஐபிஎல் தொடரிலிருந்து விலகிவிடுவார்.
வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் இந்த அறிவிப்பு சிஎஸ்கே அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.இதனால் வேறொரு வேகப்பந்துவீச்சாளரை சிஎஸ்கே வாங்கிக் கொள்ளலாமா என்ற யோசனையில் இருக்கிறது. அப்படி இல்லை என்றால் இருக்கும் வீரர்கள் வைத்துக் கொண்டே சமாளிக்கலாமா என்று தோனி, ருதுராஜ் ஆகியோர் திட்டம் போட்டு இருக்கிறார்கள். முஸ்தபிசுர் ரஹ்மான் சிஎஸ்கே அணிக்காக நடப்பு தொடரில் 5 போட்டிகளில் விளையாடி 10 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.