சென்னை: ஐபிஎல் மினி ஏலத்தில் சிஎஸ்கே அணி தரப்பில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் அம்பாத்தி ராயுடு ஆகியோருக்கான மாற்று வீரர்களை வாங்கவே அதிக ஆர்வம் காட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2024ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் நாளை துபாயில் உள்ள கோகோ கோலா வளாகத்தில் நடக்கவுள்ளது. இந்த ஐபிஎல் மினி ஏலத்தில் மொத்தமாக 333 வீரர்கள் இறுதிப்பட்டியலில் உள்ளனர். அதில் 214 இந்திய வீரர்களும், 119 வெளிநாட்டு வீரர்களும் அடங்குவர். அதில் 10 அணிகளுக்கும் சேர்த்து 77 வீரர்கள் மட்டுமே தேவையாக உள்ளனர். அதில் 30 வெளிநாட்டு வீரர்களின் இடங்கள் நிரப்பப்பட வேண்டிய நிலை உள்ளது.

இதில் சென்னை அணியை பொறுத்தவரை மொத்தமாக 8 வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் 6 வீரர்களின் இடங்கள் நிரப்ப வேண்டிய நிலைக்கு உள்ளது. பென் ஸ்டோக்ஸ், டுவைன் ப்ரிடோரியஸ், மகலா, அம்பாதி ராயுடு, ஜேமிசன், சிசண்டா, சேனாபதி, பகவத் வர்மா, ஆகாஷ் சிங் உள்ளிட்டோரை விடுவித்துள்ளது.
இதில் இம்பேக்ட் பிளேயர் மற்றும் பிளேயிங் லெவனில் உள்ள வீரர்களின் இடங்களை சிஎஸ்கே அணி முதலில் நிரப்ப தீவிரமாக இருக்கும். ஏனென்றால் பிளேயிங் லெவனில் ஆடிய அம்பாதி ராயுடு, இம்பேக்ட் பிளேயராக ஆடிய ஆகாஷ் சிங் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். பென் ஸ்டோக்ஸ் பேக் அப் வீரராக மட்டுமே சிஎஸ்கே அணியில் இருந்தார்.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் முகேஷ் சவுத்ரி இருப்பதால், அவர் இம்பேக்ட் பிளேயராக பயன்படுத்தப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. ஆனால் அம்பாதி ராயுடு மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோருக்கு நிச்சயம் மாற்ற வீரர்களை சிஎஸ்கே அணி வாங்க வேண்டும். சிஎஸ்கே அணியின் கையிருப்பில் ரூ.31.4 கோடி இருப்பதால், நிச்சயம் இரு வீரர்களுக்கு பெரிய தொகையை செலவிட சிஎஸ்கே அணி நிர்வாகம் தயங்காது.
பென் ஸ்டோக்ஸ்-க்கு பதிலாக டேரல் மிட்செலை சிஎஸ்கே அணி நிர்வாகம் வாங்கலாம் என்று பார்க்கப்படுகிறது. சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் பிளெம்மிங் வழக்கமாக நியூசிலாந்து அணி வீரர்களை சரியாக தேர்வு செய்வார். இதனால் பென் ஸ்டோக்ஸ்-க்கு சரியான மாற்று வீரராக மிட்செல் இருப்பார் என்று கணிக்கப்படுகிறது. அதேபோல் பேட் கம்மின்ஸை வாங்கவும் சிஎஸ்கே அணி நிர்வாகம் தீவிரமாக இருக்கும்.
ஏனென்றால் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்களை வாங்க தோனி மற்றும் சிஎஸ்கே அணி நிர்வாகம் அதிகமாக விருப்பம் கொள்ளும். அதனால் பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜேசன் ஹோல்டர் உள்ளிட்டோரை வாங்கவும் வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்திய ஏ அணியில் உள்ள சில வீரர்களின் பெயர்களும் சிஎஸ்கே அணி பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.