மும்பை: ஐபிஎல் மினி ஏலத்தில் அம்பாதி ராயுடுவுக்கு மாற்றாக மணீஷ் பாண்டே அல்லது கருண் நாயர் இருவரில் ஒருவரை சிஎஸ்கே அணி ஏலத்தில் வாங்கும் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 19ஆம் தேதி நடக்கவுள்ளது. இதனால் ஒவ்வொரு அணியின் ரசிகர்களும் தங்களது அணிகள் எந்தெந்த வீரர்களை ஏலத்தில் வாங்க வேண்டும் என்று விவாதித்து வருகின்றனர். ஏற்கனவே அனைத்து அணிகளும் தக்க வைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளன. அதில் சென்னை அணி மொத்தமாக 8 வீரர்களை விடுவிப்பதாக அறிவித்துள்ளது.

பென் ஸ்டோக்ஸ், டுவைன் ப்ரிடோரியஸ், மகலா, ராயுடு, ஜேமிசன், சிசண்டா, சேனாபதி, பகவத் வர்மா, ஆகாஷ் சிங் உள்ளிட்டோரை விடுவித்துள்ளது. இருப்பினும் 6 வீரர்களை மட்டுமே சிஎஸ்கே அணி நிரப்ப வேண்டிய நிலை இருக்கிறது. சென்னை அணி தரப்பில் ஜெரால்ட் கோட்சியா, ஷாரூக் கான் உள்ளிட்ட வீரர்களை வாங்க முயற்சிக்கலாம் என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் சென்னை அணியின் கையிருப்பில் ரூ.31.4 கோடி உள்ளது.
வழக்கமாக சென்னை அணி ரசிகர்கள் சிந்திக்கும் வாங்கும் பழக்கமே இல்லை. ரசிகர்களின் கணிப்புகளை பொய்யாக்கி யாரும் கண்டுகொள்ளாத வீரர்களை ஏலத்தில் வாங்கி வெற்றிபெறுவார்கள். அதுமட்டுமல்லாமல் ஸ்டார் வீரர்களை ஏலத்தில் வாங்கும் பழக்கம் சிஎஸ்கே அணிக்கு இல்லை. அதனால் ஏலத்தின் கடைசி நேரத்தில் தான் சிஎஸ்கே அணி சுறுசுறுப்பாக இயங்கும்.
ஆனால் நடப்பு சீசனில் அதிக தொகை கைகளில் இருப்பதால், பென் ஸ்டோக்ஸ்-க்கு இணையான மாற்று வீரரை தொடக்க நேரத்திலேயே வாங்கும் என்று பார்க்கப்படுகிறது. இதுகுறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பேசுகையில், சென்னை அணிக்கு பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என்று பல்வேறு திறமைகளை கொண்ட வீரர்கள் தேவையாக உள்ளது. இதனால் பென் ஸ்டோக்ஸ்-க்கு மாற்று வீரராக ரச்சின் ரவீந்திரா அல்லது டேரல் மிட்சல் ஆகியோரை ஏலத்தில் எடுக்க வாய்ப்புகள் உள்ளது.
அதேபோல் சான்ட்னர், மொயின் அலி, சொலங்கி, ஜடேஜா ஆகிய ஸ்பின்னர்கள் இருப்பதால், ஏலத்தில் ஸ்பின்னர்களை வாங்க சிஎஸ்கே அணிக்கு எந்த தேவையும் இல்லை. இருக்கும் ஸ்பின்னர்களை வைத்தே அந்த அணியால் சமாளிக்க முடியும். அதேபோல் ராயுடுவுக்கு பதிலாக மற்றொரு இந்திய வீரர் தேவையாக உள்ளார். அதனால் மணீஷ் பாண்டே அல்லது கருண் நாயர் ஆகியோரை சிஎஸ்கே அணி எடுக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார்.