மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மெகா தவறுகளை செய்து வருவதால் தான் அந்த அணி தொடர்ந்து தோற்பதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 29 வது லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி,206 ரன்களை எடுத்தது. இதனை அடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

மும்பை இந்தியன்ஸ் அணியில் கடைசி ஓவரை வீசிய ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் கடைசி நான்கு பந்துகளில் மூன்று ஹாட்ரிக் சிக்ஸர்கள் சென்றது, ஆட்டத்தில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியை கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
இது குறித்து பேசிய அவர் நேற்றைய போட்டியில் ஹர்திக் பாண்டியா செய்தது நிச்சயமாக போதுமானது கிடையாது. போட்டி தொடங்குவதற்கு 5 மணி நேரத்திற்கு முன்பு அணியை அழைத்து ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்தி, அதில் பிளான் ஏ குறித்து ஹர்திக் பாண்டியா திட்டம் போட்டு இருப்பார் என நினைக்கிறேன். ஆட்டத்தில் அது கை கூடவில்லை என்று தெரிந்தும் பிளான் பி-க்கு செல்லாமல் தொடர்ந்து பிளான் ஏ-விலேயே அவர் இருந்திருக்கிறார்.
இன்றைய ஆட்டத்தில் அவர் பும்ராவை முதல் சில ஓவர்களை வீச வைத்து விட்டு கடைசி கட்டத்தில் மீண்டும் பும்ராவை பயன்படுத்தி இருக்க வேண்டும். கடைசி ஓவர் ஹர்திக் பாண்டியா வீசியது மிகவும் தவறு. அது மட்டுமல்லாமல் முஹம்மது நபி மூன்று ஓவர்கள் வீசி 19 ரன்களை விட்டுக் கொடுத்து இருக்கிறார். ஆனால் அணியில் இருக்கும் ஸ்ரேயாஸ் கோபால், ஒரு ஓவர் வீசி 9 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார்.
ஹர்திக் பாண்டியா, ஆகாஷ் மத்வால், ரோமியோ செஃபர்ட் ஆகியோர் தங்களுக்குள் எட்டு ஓவர்களை வீசி 113 ரன்கள் விட்டுக் கொடுத்து இருக்கிறார்கள். ஒவ்வொரு வேகபந்துவீச்சாளரும் 20 ரன்களுக்கு மேல் ஒரு ஓவரில் கொடுக்கும்போது, ஏன் கூடுதலாக சுழற் பந்துவீச்சாளருக்கு ஒரு ஓவர் ஹர்திக் பாண்டியா கொடுத்திருக்கக் கூடாது. நாங்கள் கிரிக்கெட் வர்ணனை செய்து கொண்டிருந்தபோது ஹர்திக் ஏன் இந்த தவறை செய்கிறார் என்று தொடர்ந்து பேசி வந்தோம்.
ஆட்டம் விறுவிறுப்பாக செல்லும்போது எதிரணியின் ரன் வேகத்தை குறைக்க நீங்கள் சில மாற்றத்தை செய்ய வேண்டும். ஹர்திக் பாண்டியா உலகக்கோப்பை தொடர் பாதியில் சென்று நீண்ட நாட்களுக்குப் பிறகு கிரிக்கெட் விளையாட வந்திருக்கிறார். இவ்வளவு நாள் கிரிக்கெட்டை விட்டு வெளியே இருந்ததால், அது அவருடைய ஆட்டத்திறனை பாதிக்க செய்திருக்கிறது என நினைக்கின்றேன். மேலும் ஹர்திக் பாண்டியா தேவையில்லாமல் அடிக்கடி சிரிக்கிறார். நான் சந்தோஷமாக இருக்கின்றேன் என அவர் நடிக்கிறார். ஆனால் அவர் நிச்சயமாக சந்தோஷமாக இல்லை என்று பீட்டர்சன் கூறியுள்ளார்.