மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தங்களுடைய பரம எதிரியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் தோல்வியை தழுவியது. ரன் குவிப்புக்கு சாதகமான வான்கடே மைதானத்தில் 200 ரன்கள் எல்லாம் எளிதாக, துரத்தும் அணி எட்டிவிடும்.
இதனால் சிஎஸ்கே அணி 206 ரன்கள் என்ற இலக்கை மும்பை துரத்தி விடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பதிரானா அபாரமாக பந்து வீசி நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன் மூலம் மும்பை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த நிலையில் தோல்வி குறித்து பேசிய மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, 207 என்ற இலக்கை நிச்சயமாக இந்த ஆடுகளத்தில் எட்ட முடியும். ஆனால் சிஎஸ்கே வீரர்கள் சிறப்பாக பந்து வீசி எங்களை தோற்கடித்து விட்டார்கள்.
இந்த ஆட்டத்தில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியவர் பதிரானா தான். சிஎஸ்கே அணி தங்களுடைய அறிவுக்கூர்மையான திட்டத்தால் எங்களை தோற்கடித்து விட்டார்கள். வான்கடே மைதானத்தில் ஒரு புறம் மட்டும் பவுண்டரி கொஞ்சம் தூரமாக இருக்கும். அதனை சிஎஸ்கே சிறப்பாக பயன்படுத்தியிருக்கிறார்கள்.
மேலும் அவர்களும் ஸ்டெம்புக்கு பின் இருக்கும், நபர் அனைத்தையும் பார்த்துக் கொண்டு திட்டத்தை தீட்டி எங்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்துவிட்டார். பந்து பேட்டிற்கு கடைசி கட்டத்தில் சரியாக வரவில்லையோ என்று எனக்கு தோன்றியது. நாங்கள் இலக்கை நோக்கி சென்று கொண்டிருந்தோம். ஆனால் பதிரானா பந்து எங்களை தடுத்து விட்டார்.
இந்த ஆடுகளத்தில் சுழற் பந்துவீச்சை விட வேகப்பந்துவீச்சாளர்களை அடிப்பது தான் சிரமமாக இருந்தது. தற்போது நாங்கள் அடுத்த நான்கு போட்டிகளை மும்பைக்கு வெளியே விளையாட போகிறோம். இந்த நான்கு போட்டிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். நாங்கள் அறிவுப்பூர்வமாக நடந்து கொண்டால் நிச்சயம் எங்களுடைய இலக்கை எட்ட முடியும் என்று ஹர்திக் பாண்டியா கூறினார்.