மும்பை : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 14 கோடி ரூபாய் கொடுத்து நியூசிலாந்து வீரர் டேரல் மிட்செலை வாங்கி இருக்கிறது. இதுவரை ஐபிஎல் தொடரில் வெறும் இரண்டு போட்டிகள் மட்டுமே விளையாடிய டேரல் மிட்செல், ராஜஸ்தான் அணிக்காக 33 ரன்கள் சேர்த்திருந்தார்.
ஆனால் டேரல் மிட்செலின் வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது உலகக்கோப்பை தொடர்தான். இந்தியாவில் நடைபெற்ற இந்த தொடரில் டேரல் மிட்செல் 552 ரன்கள் குவித்து இருந்தார். சுழற் பந்துவீச்சை அபாரமாக எதிர்கொள்ளும் திறமையை உடைய டேரல் மிட்செலை சிஎஸ்கே அணி வாங்கியது.

ஆனால் மிட்செல், சிஎஸ்கே வைத்த நம்பிக்கையை காப்பாற்றினாரா என்று கேட்டால் இல்லை என்பது தான் சரியான பதில். இதுவரை ஆறு போட்டியில் விளையாடியுள்ள டாரல் மிட்செல், மொத்தமாக 135 ரன்கள் தான் அடித்திருக்கிறார். இதில் அதிகபட்சம் 34 ரன்கள் ஆகும். சராசரி 27 ரன்னும், ஸ்ட்ரைக் ரேட் 125 என்ற அளவில் மோசமானதாக இருக்கிறது.
ராயுடுக்கு பதில் மாற்று வீரராக பட்டையை கிளப்புவார் என சிஎஸ்கே எதிர்பார்த்தது. ஆனால் மும்பைக்கு எதிரான போட்டியில் முக்கியமான கட்டத்தில் டேரல் மிட்செல் சிங்கிள்ஸ் எடுத்து ரசிகர்களை வெறுப்பேற்றினார். அந்த ஆட்டத்தில் மட்டும் டேரல் மிட்செல் கொஞ்சம் அதிரடி காட்டி இருந்தால், சிஎஸ்கே அணி 240 ரன்கள் தொட்டிருக்கும்.
இந்த நிலையில் நேற்று மும்பை அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது டேரல் மிட்செலை அழைத்து சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி சில அறிவுரையை வழங்கினார். இந்த வீடியோவை பார்த்து கருத்து தெரிவித்துள்ள மேத்யூ ஹைடன், டேரல் மிட்செலுக்கு சில பிரச்சனைகள் இருக்கிறது. அவரிடம் திறமை உள்ளது.
ஆனால் பரபரப்பான இந்த தொடரில் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் டேரல் மிட்செல் தடுமாறுகிறார். இதனை பார்த்த தோனி அவரை அழைத்து முதலில் களத்தில் அமைதியாக இருக்க வேண்டும். அதற்கு மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும் என்று தோனி செய்து காட்டியதை சுட்டிக்காட்டினார். நெருக்கடியான சமயத்தில் நன்றாக மூச்சை இழுத்து விடும் போது அமைதி மனதில் ஏற்படும் என்று ஹைடன் குறிப்பிட்டுள்ளார்.
அதன்பிறகு பேட்டை எந்தக் கையால் பிடித்து சிக்ஸர் அடிப்பதற்கான பவரை உருவாக்க வேண்டும் என்பது குறித்து தோனி டேரல் மிட்செலுக்கு சொல்லிக் காட்டியதை ஹைடன் ரசிகர்களுக்கு விளக்கினார். மிட்செல் செய்த இந்த இரண்டு தவறை தோனி சுட்டிக்காட்டி பேசியதன் மூலம் அவர் அடுத்த போட்டியில் பட்டையை கிளப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இனி சிஎஸ்கே வரும் வெள்ளிக்கிழமை லக்னோவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் விளையாடுவது குறிப்பிடத்தக்கது.