மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் இந்த தோல்விக்கு தோனி அடித்த மூன்று சிக்ஸர்கள் தான் காரணம் என்று ரசிகர்கள் பலரும் கருத்து கூறி வருகின்றனர்.
மேலும் இந்த ஓவரை வீசிய ஹர்திக் பாண்டியா மோசமான வகையில் பந்து வீசியதாக பலரும் குற்றம்சாட்டி இருக்கிறார்கள். இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியை தழுவியதற்கு ஹர்திக் பாண்டியா காரணம் இல்லை என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் ஜாம்பவான் பொலார்ட் தெரிவித்து இருக்கிறார்.

இது குறித்து பேசிய அவர் ஹர்திக் பாண்டியாவை விமர்சிப்பது தவறு. ஒரு கிரிக்கெட் வீரருக்கு இதுபோல் ஒரு நல்ல நாளும் அமையும், ஆடுகளத்தில் கெட்ட நாளும் அமையும். இது போன்ற தோல்விக்கு பிறகு இவர்தான் காரணம். அவர்தான் காரணம் என்று குறை கூறுவதை கேட்டு எனக்கு அலுத்து போய்விட்டது. கிரிக்கெட் என்பது ஒரு அணியாக சேர்ந்து விளையாடுவது என்பதை யாரும் மறந்து விட வேண்டாம்.
ஹர்திக் பாண்டியா நல்ல நம்பிக்கையுடன் இருக்கிறார். அவர் ஒரு அணியை சிறப்பாக வழி நடத்துகிறார். ஒவ்வொரு நாளும் அணிக்காக அவர் கடுமையாக உழைப்பதை நான் என் கண்களால் பார்க்கின்றேன். ஹர்திக் பாண்டியா இன்னும் ஒரு ஆறு வாரத்தில் இந்திய அணிக்காக விளையாட போகிறார் என்பதை யாரும் மறந்து விட வேண்டாம்.
அப்போது நாம் அனைவரும் ஹர்திக் பாண்டியாவுக்கு ஆதரவாக தான் நிற்போம். அவர் அணிக்காக நன்றாக விளையாட வேண்டும் என்றும் ஆசைப்படுவோம். ஹர்திக் பாண்டியா பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலுமே முதன்மையான நபராக இருக்கிறார். நிச்சயமாக இந்த தொடரில் அவர் சிறப்பாக செயல்படுவார் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
அப்போது நான் அமைதியாக அமர்ந்து, அனைவரும் ஹர்திக் பாண்டியாவை பாராட்டுவதை நான் கேட்பேன். உங்களுக்கு வயது ஆக ஆக நீங்களும் மாற வேண்டும். இளம் வயதில் சில விஷயத்தை நீங்கள் உங்களுடைய ஸ்டைலில் செய்வீர்கள். ஆனால் வயதாகும் போது உங்களுக்கு பல பொறுப்புகள் வந்து சேரும். ஹர்திக் பாண்டியா மாறி வருவதை என்னால் பார்க்க முடிகிறது.
தோனிக்கு நாம் எந்த திட்டம் வேண்டுமானாலும் தீட்டலாம். ஆனால் அவர் அடிக்க வேண்டும் என்று நினைத்தால், நிச்சயமாக அந்த மூன்று சிக்சரை அடித்திருப்பார். ஹர்திக் பாண்டியா மட்டும் அல்ல அந்த ஓவரில் வேறு யாரு வீசி இருந்தாலும் தோனி 20 ரன்கள் அடித்திருப்பார். எம் எஸ் தோனி ஒரு உலகத்தரம் வாய்ந்த வீரர். அவர் எப்போதும் கிரிக்கெட் களத்தில் விளையாட தான் நான் ஆசைப்படுகிறேன்.
தோனி அடித்த அந்த மூன்று சிக்சர் பிரச்சனை இல்லை. ஆனால் 20 ரன்கள் வித்தியாசத்தில் நாங்கள் தோற்றோம் என்பதுதான் வித்தியாசத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நீங்கள் பார்ப்பதை விட கிரிக்கெட்டில் பல விஷயங்கள் அதையும் தாண்டி இருக்கின்றது. நாங்கள் எங்கு செல்கிறோம் என்பது குறித்து ஆராய்ந்து அதிலிருந்து எப்படி மீள்வது என்பது குறித்து நாங்கள் உழைப்போம்.
கண்டிப்பாக ஒரு பலமான அணியாக திரும்புவோம். விராட் கோலி, ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா, தோனி ஆகிய வீரர்களுக்கு நீங்கள் எந்த பிளானை வேண்டுமானாலும் வகுக்கலாம். ஆனால் அதனை சரியான முறையில் நடைமுறைப்படுத்துகிறோமா இல்லையா என்பதில் தான் சிக்கல் இருக்கிறது என்று பொலார்ட் கூறியுள்ளார்.