மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சிஎஸ்கே அணியின் கேப்டனான ருதுராஜ் கெய்க்வாட் யாருமே படைக்காத அபார சாதனையை இன்று தனக்கு சொந்தமாக்கி இருக்கிறார். சிஎஸ்கே அணி இன்று பலம் வாய்ந்த மும்பை இந்தியன்ஸ் அணியை வான்கடே மைதானத்தில் எதிர்கொண்டது.
இந்த போட்டியில் சிஎஸ்கே அணி தங்களுடைய பேட்டிங் வரிசையை தலைகீழ் மாற்றியது. தொடக்க வீரராக ரகானேவும், ரச்சின் ரவீந்தராவும் களமிறங்கினர். ரஹானே ஐந்து ரன்களில் ஆட்டம் இழக்க, ரவிந்தரா 21 ரன்களில் வெளியேறினார்.

இதனை அடுத்து மூன்றாவது விக்கெட்டுக்கு சிவம் துபேவுடன் சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் ருதுராஜ் ஜோடி சேர்ந்து அபாரமாக விளையாடினார். நீங்க பந்தை எப்படி வேண்டுமானாலும், போடுங்க அதை நான் அடிப்பேன் என்ற பாணியில் ருதுராஜ் பட்டையை இன்று கிளப்பினார். 33 பந்துகளில் அரை சதம் கடந்த ருதுராஜ் மூன்று பவுண்டரி, நான்கு சிக்ஸர் என அடித்தார்.
இதன் மூலம் ஐபிஎல் தொடரில் வரலாற்று சிறப்புமிக்க சாதனை ஒன்றை ருதுராஜ் படைத்திருக்கிறார். அதாவது ஐபிஎல் வரலாற்றில் 2000 ரன்களை அதிவேகமாக எட்டிய இந்திய வீரர் என்ற பெருமையை ருதுராஜ் படைத்திருக்கிறார்.ஏற்கனவே அதிவேகமாக ஆயிரம் ரன் அதிவேகமாக எட்டிய சச்சினின் சாதனையை ருதுராஜ் 31 இன்னிங்ஸில் சமன் செய்தார்.
தற்போது 2000 ரன்களை 57 இன்னிங்ஸில் எட்டி புதிய சாதனையை படைத்திருக்கிறார். ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 3000 ரன்களைக் கடந்த இந்திய வீரர் என்ற பெருமையை கே.எல். ராகுல் 80 இன்னிங்சிலும், 4,000 ரன்களை கடந்த இந்திய வீரர் என்ற பெருமையை கே.எல். ராகுல் 105 இன்னிங்சிலும் படைத்து உள்ளார்.
அதிவேகமாக 5,000 ரன்களை கடந்த இந்திய வீரர் என்ற பெருமை தற்போது விராட் கோலிக்கு இருக்கிறது. 157 இன்னிங்ஸில் 5000 ரன்களை கடந்த கோலி, 188 இன்னிங்ஸில் 6000 ரன்களை கடந்து அதிலும் சாதனை படைத்திருக்கிறார். தற்போது ருதுராஜ் 57-வது இன்னிங்ஸிலே 2000 நன்களை கடந்திருப்பதால் அவர் கே.எல். ராகுல் மற்றும் கோலி ஆகியோரின் சாதனையை முறியடிக்க வாய்ப்பு இருக்கிறது.