மும்பை : 2024 ஐபிஎல் மினி ஏலத்துக்கு முன்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தமிழக ஸ்பின்னரான முருகன் அஷ்வினை அணியில் இருந்து நீக்கி இருக்கிறது. பல ஆண்டுகள் ராஜஸ்தான் அணியில் இருந்த நிலையில் அவரை வெளியேற்றி இருக்கிறது அந்த அணி.
டெல்லி கேபிடல்ஸ் அணி 11 வீரர்களை வெளியேற்றி அதிர்ச்சி அளித்துள்ளது. நல்ல வீரர்கள் சிலரை அந்த அணி அனுப்பி இருப்பது விமர்சனத்தை கிளப்பி இருக்கிறது.
மறுபுறம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இருக்கின்ற நல்ல வீரர்களை தக்க வைக்காமல் சொதப்பி இருக்கிறது. வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல அந்த அணியின் மூத்த வீரர் ஜோ ரூட் 2024 ஐபிஎல் தொடரில் தன்னால் பங்கேற்க முடியாது என அறிவித்து விலகி விட்டார்.
டெல்லி கேபிடல்ஸ் அணி கடந்த இரண்டு சீசன்களாக சொதப்பி வந்த நிலையில் அணியில் பெரிய மாற்றத்தை செய்ய வேண்டும் என முடிவு செய்து கண்ணை மூடிக் கொண்டு 11 வீரர்களை நீக்கி இருக்கிறது.

டெல்லி கேபிடல்ஸ் அணியால் நீக்கப்பட்ட வீரர்கள் பட்டியல் - ரிலீ ரோசோவ், சேத்தன் சகாரியா, ரோவ்மேன் பவல், மணீஷ் பாண்டே, பில் சால்ட், முஸ்தாபிசுர் ரஹ்மான், கமலேஷ் நாகர்கோட்டி, ரிபால் பட்டேல், சர்பராஸ் கான், அமன் கான், பிரியம் கார்க்.
இந்த பட்டியலில் பில் சால்ட் அதிரடி வீரர் ஆவார். 150 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ள அவரை டெல்லி அணி சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் தற்போது அவரை நீக்கி இருக்கிறது. அதே போல சர்ப்ராஸ் கான் நல்ல பேட்ஸ்மேன் என்ற போதிலும் அவரது திறமையை வெளிக் கொண்டு வராமல் அவரை வெளியே அனுப்பி இருக்கிறது அந்த அணி. இந்த 11 வீரர்களை விலக்கியதன் மூலம் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு மொத்தமாக மினி ஏலத்தில் செலவு செய்ய 28.95 கோடி கையிருப்பு கிடைத்துள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தன் பங்கிற்கு 9 வீரர்களை நீக்கி இருக்கிறது. அதில் குறிப்பாக தமிழக ஸ்பின்னர் முருகன் அஷ்வின் பெயர் இடம் பெற்று இருந்தது பலரை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது. அந்த வீரர்கள் பட்டியல் - ஜோ ரூட், அப்துல் பாசித், ஜேசன் ஹோல்டர், ஆகாஷ் வசிஷ்ட், குல்தீப் யாதவ், ஓபேட் மெக்காய், முருகன் அஷ்வின், கே.சி கரியப்பா, கே.எம்.ஆசிப்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஜோ ரூட் தானாக விலகிய நிலையில், இளம் இந்திய வீரர் தேவதத் படிக்கல்லை லக்னோ அணிக்கு அணி மாற்றம் செய்துள்ளது இந்த அணி. அவருக்கு பதிலாக ஆவேஷ் கானை வாங்கி இருக்கிறது ராஜஸ்தான்.
எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. 8 வீரர்களை வெளியே அனுப்பிய சிஎஸ்கே.. தோனி பெயர் இருக்கா?
தற்போது இந்த வீரர்களை நீக்கியதன் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 14.50 கோடி கையிருப்பு கிடைத்துள்ளது. மற்ற அணிகளுடன் ஒப்பிட்டால் இது குறைந்த தொகை தான்.