மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா அபாரமாக விளையாடி நல்ல தொடக்கத்தை கொடுத்த நிலையில், அவர் சுயநலமாக செயல்பட்டதாக விராட் கோலி ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சினிமாவில் எப்படி விஜய், அஜித் ரசிகர்கள் சண்டை போடுவார்களோ அதே போல் விராட் கோலி, ரோஹித் சர்மா ரசிகர்கள் கிரிக்கெட்டில் சண்டை போட்டு வருகிறார்கள். நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி அபாரமாக விளையாடி சதம் அடித்தார்.

எனினும் விராட் கோலி முதல் 30 பந்துகளை வீணடித்து அதில் குறைவான ரன்களை எடுத்தார் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விராட் கோலி தொடக்கத்திலிருந்து அதிரடியாக ஆடுவதில்லை என்று ரோகித் சர்மா ரசிகர்கள் குற்றம் சாட்டினர். மேலும் சதம் நெருங்கும்போது விராட் கோலி தன்னுடைய ரன்னடிக்கும் விதத்தை குறைத்து விட்டதாகவும் அவர்கள் புகார் கூறியுள்ளனர்.
இந்த நிலையில் இன்றைய ஆட்டத்தில் டெல்லி, மும்பை இந்தியன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது. இதில் களமிறங்கிய ரோகித் சர்மா எடுத்தவுடன் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார். 27 பந்துகளை எதிர்கொண்ட ரோகித் சர்மா 49 ரன்கள் சேர்த்தார். இதில் ஆறு பவுண்டரிகளும் மூன்று சிக்ஸர்களும் என ஸ்ட்ரைக் ரேட் 181 என்ற லெவலில் இருந்தது.
இதனை ரோகித் சர்மா ரசிகர்கள் கொண்டாடி வந்தனர். மும்பை அணிக்கு ரோகித் அதிரடியாக விளையாடி நல்ல அடித்தளத்தை போட்டு கொடுத்து விட்டார் என்றும் இதனை விராட் கோலி செய்ய தவற விட்டார் என்றும் ரோகித் ரசிகர்கள் தெரிவித்தனர். இதற்கு பதிலடி கொடுத்துள்ள விராட் கோலி ரசிகர்கள் ரோகித் சர்மா தான் தற்போது சுயநலமாக ஆடியிருப்பதாக தெரிவித்துள்ளனர்.
ரோகித் சர்மா 23 பந்தில் இருக்கும் போதே 49 ரன்களை தொட்டுவிட்டதாகவும், ஆனால் அந்த ஒரு ரன் எடுத்து அரைசதம் எடுப்பதற்காக ரோஹித் சர்மா அதிரடி காட்டாமல் சிங்கிள்ஸ் எடுக்க முயற்சி செய்து மூன்று பந்துகளை வீணடித்து விட்டு நான்காவது பந்தில் போல்ட் ஆகிவிட்டதாகவும் விராட் கோலி ரசிகர்கள் கூறியுள்ளனர். ரோகித் சர்மாவும் மைல் கல்லை நெருங்கும் போது சுயநலமாக ஆடுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.