ஹைதராபாத் : ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் கேப்டன் பதவியை இழந்து இருக்கும் ரோஹித் சர்மாவை தங்கள் அணிக்கு இழுக்க சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தீவிர முயற்சியில் இருப்பதாக ஒரு தகவல் வலம் வருகிறது.
அதிலும் குறிப்பாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன், ரோஹித் சர்மாவுக்கு பணம் குறிப்பிடப்படாத காசோலையை அளிக்க முன்வந்ததாக தகவல் பரவி வருகிறது. மேலும், ரோஹித் சர்மா ஹைதராபாத் அணிக்கு வந்தால் அவரை கேப்டனாக நியமிப்பதாகவும் வாக்குறுதி அளித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இதில் எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.

2024 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக ஐந்து முறை கோப்பை வென்று கொடுத்த ரோஹித் சர்மாவை அந்த அணி நீக்கியது. குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு, ஒரு ஐபிஎல் கோப்பை வென்று கொடுத்திருந்த ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் தங்கள் அணிக்கு அழைத்து வந்தது.
அதனால், மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் பலரும் அவருக்கு,. மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் ரோஹித் சர்மாவே இந்த விஷயத்தில் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. அவரை பல ஐபிஎல் அணிகளும் தங்கள் அணிக்கு இழுக்க முயற்சி செய்வதாக சில மாதங்கள் முன்பு தகவல்கள் வந்தன. ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணியுடனான ஒப்பந்தப்படி அவர் 2024 ஐபிஎல் தொடர் முடிந்த பின்பே அந்த அணியை விட்டு சிக்கலின்றி விலகலாம்.
இந்த நிலையில் 2025 ஐபிஎல் தொடரில் மெகா ஏலம் நடைபெற உள்ளது. அதற்கு முன் ஒவ்வொரு அணியும் நான்கு வீரர்களை மட்டுமே தங்கள் அணியில் தக்க வைக்கலாம். மும்பை இந்தியன்ஸ் அணி நிச்சயம் ரோஹித் சர்மாவை தக்க வைக்காது என கூறப்படுகிறது. அப்படியே அந்த அணி தக்க வைக்க விரும்பினாலும் ரோஹித் சர்மா அதற்கு ஒப்புக் கொள்ள மாட்டார் என கூறப்படுகிறது.
2024 ஐபிஎல் தொடர் முடிந்த பின் அணி மாற்றம் செய்ய முடியுமா? என தெளிவாக தெரியாத நிலையில் 2025 மெகா ஏலத்துக்கு முன்பாகவே ரோஹித் சர்மாவை அணி மாற்றம் செய்ய சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் முயன்று வருவதாக தகவல் பரவி வருகிறது. அதிலும் காவ்யா மாறன் பணம் குறிப்பிடாத காசோலை கொடுத்ததாக கூறப்படும் தகவல் உண்மையாக இருக்க வாய்ப்பு குறைவு தான். ஐபிஎல் விதிப்படி ஒரு வீரர் அணி மாற அவரது தற்போதைய அணியுடன், மற்ற அணி பேச வேண்டும். நேரடியாக வீரர்களுடன் தொடர்பு கொள்ளக் கூடாது.