மும்பை: ஜியோ சினிமாஸ் தரப்பில் நடத்தப்பட்ட ஐபிஎல் மாதிரி ஏலத்தில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு அதிக தொகை அளிக்கப்பட்டுள்ள சம்பவம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் நாளை துபாயில் நடக்கவுள்ளது. முதல்முறையால ஐபிஎல் ஏலம் வெளிநாட்டில் நடக்கவுள்ளது. இந்த ஏலத்தில் மொத்தமாக 333 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்கவுள்ள நிலையில், 10 அணிகளின் தேவை 77 வீரர்களாக மட்டுமே உள்ளது. இதனால் ஒவ்வொரு அணியும் எந்த வீரரை தேர்வு செய்யும் என்பதை ரசிகர்கள் இப்போதே விவாதம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஐபிஎல் தொடருக்கான Mock Auction ஜியோ சினிமாஸ் ஓடிடி தளத்தில் நடத்தப்பட்டது. இந்த ஏலத்தில் முன்னாள் வீரர்கள், நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். அதில் சிஎஸ்கே அணிக்காக சுரேஷ் ரெய்னாவும், மும்பை அணிக்காக அனில் கும்ப்ளேவும், ஆர்சிபி அணிக்காக மைக் ஹெசனும், பஞ்சாப் அணிக்காக அபினவ் முகுந்த், ராஜஸ்தான் அணிக்காக ஜாகீர் கான், கேகேஆர் அணிக்காக உத்தப்பா ஆகியோர் பங்கேற்றனர்.
அதேபோல் டெல்லி அணிக்காக ஆகாஷ் சோப்ரா, லக்னோ அணிக்காக ஆர்பி சிங், குஜராத் அணிக்காக பார்த்தீவ் படேல், ஹைதராபாத் அணிக்காக மோர்கன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த மாக் ஏலத்தில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு அனைத்து அணிகள் தரப்பும் அதிக தொகை கொடுத்து வாங்கப்பட்டுள்ளனர்.
அதன்படி ஆஸ்திரேலியா அணியின் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் அதிகபட்சமாக ரூ.18.5 கோடிக்கு ஆர்சிபி அணியால் வாங்கப்பட்டுள்ளார். இவர் 8 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஐபிஎல் விளையாட முன் வந்துள்ளதால், அவரை வாங்க அனைத்து அணிகள் தரப்பில் தீவிரமாக ஏலம் கோரப்பட்டது. இதனைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்கா அணியின் இளம் வீரர் ஜெரால்ட் கோட்சியே ரூ.18 கோடிக்கு குஜராத் அணியால் வாங்கப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பேட் கம்மின்ஸ் ரூ.17.50 கோடிக்கு ஐதராபாத் அணியாலும், இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரூ.14 கோடிக்கு பஞ்சாப் அணியாலும் வாங்கப்பட்டுள்ளார். அதேபோல் ஆச்சரியமளிக்கும் வகையில் இலங்கை அணியின் தில்ஷன் மதுஷங்கா ரூ.10.5 கோடிக்கு கேகேஆர் அணியால் வாங்கப்பட்டுள்ளார். உலகக்கோப்பை தொடரின் போது இலங்கை அணிக்காக பவர் பிளே ஓவர்களில் விக்கெட்டை வேட்டை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.