மும்பை : மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் அணியில் விரிசல் உள்ளதாக பேச்சு இருக்கும் நிலையில், ரோஹித் சர்மா மனைவி ரித்திகாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹர்திக் பாண்டியா சூசகமாக வீடியோ வெளியிட்டு இருக்கிறார். என்ன நடந்தது?
சில மாதங்கள் முன்பு மும்பை இந்தியன்ஸ் அணி தங்கள் அணியில் 10 ஆண்டுகள் கேப்டனாக இருந்த ரோஹித் சர்மாவை நீக்கி விட்டு, ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்தனர். இந்த மாற்றம் சுமூகமாக நடைபெறவில்லை எனவும், ரோஹித் சர்மாவின் விருப்பம் இல்லாமலே அவரை நீக்கி விட்டதாக கூறப்படுகிறது. அப்படி நீக்க மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அனைத்து உரிமைகளும் இருந்தாலும், அதை அனைத்து தரப்பும் ஏற்கும் வகையில் செய்யவில்லை.

ரோஹித் சர்மா நேரடியாக இது குறித்து பேசவில்லை என்றாலும் அவரது மனைவி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பதிவுக்கு லைக் போட்டதன் மூலம், மும்பை இந்தியன்ஸ் அணி உரிமையாளர்களுக்கும், தங்களுக்கும் இடையே பனிப்போர் நடந்து வருவதை அவர் சூசகமாக தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் மார்க் பவுச்சர் சமீபத்தில் ஒரு பேட்டியில், ரோஹித் சர்மாவின் பேட்டிங் ஃபார்ம் சரியாக இல்லாததால் அவரது பணிச்சுமையை குறைக்க வேண்டி கேப்டன் பதவியில் இருந்து நீக்கியதாகவும், அதன் மூலம் அவர் தன் குடும்பத்தினருடன் கூடுதல் நேரம் செலவிட முடியும் என கருதுகிறார் எனவும் கூறி இருந்தார்.
ஆனால், இந்தப் பேட்டியில் நிறைய தவறு இருக்கிறது என ரோஹித் சர்மாவின் மனைவி ரித்திகா சஜ்தே கூறி இருந்தார். அதை பொதுவெளியில் சொல்லாமல், நேரடியாக மார்க் பவுச்சர் அல்லது மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்திடம் ரித்திகா அல்லது ரோஹித் பேசி இருக்கலாம். ஆனால், வெளிப்படையான அவரது அந்த பதிவால் ரோஹித் சர்மா - மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்துக்கு இடையே விரிசல் பெரிதாக இருப்பது வெட்ட வெளிச்சமானது.
இந்த நிலையில், இந்த பிரச்சனைக்கு காரணமான ஹர்திக் பாண்டியா தான் காயத்தில் இருந்து மீண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்ப உள்ளதை சூசகமாக அறிவிக்கும் வகையில் வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அவர் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார். எனவே, மீண்டும் ரோஹித் சர்மாவே அந்த அணியின் கேப்டனாக செயல்படுவார் என செய்திகள் இருக்கும் நிலையில், ஹர்திக் பாண்டியா தான் யோகா செய்வது, பவுலிங் மற்றும் பேட்டிங் பயிற்சி செய்யும் வீடியோக்களை வெளியிட்டு இருக்கிறார். அந்த பதிவின் கீழ் சிலர் இது ரித்திகாவின் பதிவுக்கு பதிலடி பதிவு என கூறி இருக்கின்றனர்.