மும்பை : இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் காயம் காரணமாக பாதியில் விலகினார். ஹர்திக் பாண்டியாவின் இந்த முடிவு இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
முகமது சமி காயம் இருந்தும் வலி நிவாரண ஊசியை போட்டுக்கொண்டு விளையாடினார்.
இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும் என்பதற்காக உலக கோப்பையில் இருந்து விலகி விட்டார் என்று குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் உலககோப்பை தொடரின் போது என்ன நடந்தது என்பது குறித்து முதல்முறையாக ஹர்திக் பாண்டியா மௌனத்தை கலைத்துள்ளார்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு பேசிய அவர் உலகக்கோப்பை தொடரின் போது தமக்கு காலில் காயம் ஏற்பட்டது. என்னால் நடக்கக்கூட முடியவில்லை. எனினும் உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகும் முடிவில் நான் இல்லை. கண்டிப்பாக நாட்டுக்காக விளையாட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.
நான் அணி நிர்வாகத்திடம் எனக்கு ஒரு ஐந்து நாள் ஓய்வு கொடுங்கள். நான் மீண்டும் வந்து விடுகிறேன் என்று கூறினேன். கணுக்காலில் எனக்கு மூன்று இடங்களில் வலி நிவாரண ஊசி போடப்பட்டது. எனக்கு ரத்தம் சொட்டியது. அதையும் மீறி தான் நான் நாட்டுக்காக விளையாட வேண்டும் என்று கடுமையாக முயற்சி செய்தேன். அந்த ஐந்து நாளில் நான் எடுத்த முயற்சி எனக்கு பெரும் பாதகத்தை ஏற்படுத்தி விட்டது.
நான் ஓய்வு எடுக்காமல் மீண்டும் அணிக்கு திரும்ப வேண்டும் என முயற்சி செய்ததால், அந்த பத்து நாள் ஓய்வு மூன்று மாதத்திற்கு ஓய்வாக மாறிவிட்டது. தொடர்ந்து பத்து நாட்களுக்கு வலி நிவாரண மாத்திரைகளை நான் சாப்பிட்டேன். எப்படியாவது உலக கோப்பையில் மீண்டும் திரும்ப வேண்டும் என்று கடும் முயற்சி செய்தேன். ஆனால் எதுவுமே நடக்கவில்லை என்று ஹர்திக் பாண்டியா வேதனை தெரிவித்துள்ளார்.
மூன்று மாதமாக எந்த கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்காத ஹர்திக் பாண்டியா, தற்போது உடல் தகுதியை மீட்டு ஐபிஎல் தொடருக்கு திரும்புகிறார். மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டது. ரசிகர்களிடையே வரவேற்பை பெறவில்லை. இதனால் அவர் மீது கடுமையான விமர்சனங்களை ரசிகர்கள் வைத்து வரும் நிலையில் தற்போது முதல் முறையாக தமக்கு உடல் நிலையில் என்ன பாதிப்பு ஏற்பட்டது என்பது குறித்து ஹர்திக் பாண்டியா பேசியிருக்கிறார்.