மும்பை : தனக்கு வாய்ப்பு அளித்து வளர்த்து விட்ட ரோஹித் சர்மாவின் கேப்டன் பதவிக்கே ஹர்திக் பாண்டியா வேட்டு வைக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஐபிஎல் ரசிகர்கள் மத்தியில் கடந்த சில நாட்களாக பரபரப்பான விஷயம் ஒன்று பேசப்பட்டு வருகிறது. குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தன் தாய் வீடு போன்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கே திரும்பி வரப் போகிறார். அதற்காக மும்பை இந்தியன்ஸ் அணி வேறு சில வீரர்களை அணியில் இருந்து நீக்கப் போகிறது என்பதே அந்த தகவல்.

இந்த தகவலை கேட்ட உடன் எல்லோருக்கும் முதலில் தோன்றிய எண்ணம், குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா ஒரு முறை கோப்பை வென்று கொடுத்து இருக்கிறார். இரண்டாவது முறை இறுதிப் போட்டி வரை அணியை அழைத்து சென்று இருக்கிறார். இப்படிப் பட்ட நிலையில் எந்த அணியாவது தங்கள் அணியின் கேப்டனை மற்றொரு அணிக்கு மற்ற சம்மதம் தெரிவிக்குமா? என்பது தான்.
ஆனால், ஹர்திக் பாண்டியா, குஜராத் அணி உரிமையாளர்களுடன் ஏற்பட்ட மனக் கசப்பால் தாமாகவே அணியை விட்டு தன்னை விலக்கி விடுங்கள் என கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. அதே சமயம், தனது முந்தைய அணியும் தன்னை உருவாக்கிய ஐபிஎல் அணியுமான மும்பை இந்தியன்ஸ்க்கு மீண்டும் செல்ல அவர் விருப்பம் தெரிவித்து இருக்கிறார். எனவே, மும்பை இந்தியன்ஸ் அணியும் அவரை வாங்க மகிழ்ச்சியுடன் முன் வந்துள்ளது. ஆனால், இதில் தான் ஒரு சிக்கல் உள்ளது.
ஹர்திக் பாண்டியா குஜராத் டைட்டன்ஸ் அணியில் கேப்டனாக இருந்துள்ளார். அவரை மும்பை அணிக்கு திருப்பி அழைத்தால் அவருக்கு கேப்டன் பதவி அளிக்கப்படுமா? அப்படி என்றால் 11 ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்து அந்த அணிக்கு ஐந்து முறை கோப்பை வென்று கொடுத்த ரோஹித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்படுவாரா? இந்த கேள்விகள் சர்ச்சையாக மாறி உள்ளன.
இது குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூட கேள்வி எழுப்பி இருக்கிறார். "கோப்பை வென்று கொடுத்த கேப்டனை ஒரு அணி நீக்குமா? அப்படி நடந்தாலும், மும்பை இந்தியன்ஸ் அணி அவருக்கு கேப்டன் பதவி அளிக்குமா?" என அவர் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
2015இல் புதிய வீரராக ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்த போது ரோஹித் சர்மாதான் கேப்டன். அவர் தான் அவருக்கு போட்டிகளில் வாய்ப்பு அளித்து அவரை மெருகேற்றினார். அதன் பின்னரே மாநில அளவிலான வீரராக இருந்த ஹர்திக் பாண்டியா இந்திய அணியில் வாய்ப்பு பெற்றார். ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வருவதில் பிரச்சனை இல்லை.
ஆனால், அவர் ரோஹித் சர்மாவின் கேப்டன் பதவியை குறி வைத்து வருகிறார் என்றால் அது தான் பிரச்சனை. அதே சமயம் தற்போது கேப்டனாக இருக்கும் அணியில் இருந்து வெறும் வீரராக அல்லது துணை கேப்டனாக அவர் கீழே இறங்குவாரா? என்ற கேள்விக்கும் விடை தெரியவில்லை.