மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 2024 ஆம் ஆண்டு சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி ஹாட்ரிக் தோல்வியை தழுவி இருக்கிறது. மும்பை அணி தங்களுடைய சொந்த மண்ணில் முதல் போட்டியை களம் இறங்கியது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
ட்ரெண்ட் பவுல்ட் அபாரமாக பந்து வீசி ரோகித் சர்மா ,நமன் மற்றும் டிவால்ட் பிரவீஸ் ஆகியோரின் விக்கெட்டுகளை கோல் டன் டக்காக வீழ்த்தினார். அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 34 ரன்கள், திலக் வர்மா 32 ரன்கள் எடுக்க மும்பை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் மட்டுமே எடுத்தது.

ராஜஸ்தான் பந்துவீச்சு தரப்பில் பவுல்ட் 3 விக்கெட்டுகளையும், சாகல் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ராஜஸ்தான் அணி களம் இறங்கியது. தொடக்க வீரராக களமிறங்கிய ஜெய்ஸ்வால் அதிரடியாக ஆட முற்பட்டு இரண்டு பவுண்டரிகளை சேர்த்த நிலையில் 10 ரன்களில் டிம் டேவிட் இடம் கேட்ச் ஆனார்.
இதேபோன்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜாஸ் பட்லர் 13 ரன்களில் வெளியேறினார். கேப்டன் சஞ்சு சாம்சன் 12 ரன்கள் சேர்த்த நிலையில் மதுவால் பந்தில் போல்ட் ஆனார். இந்த நிலையில் ராஜஸ்தான் அணியும் 48 ரன்கள் சேர்ப்பதற்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்தது. இதனால் இந்த ஆட்டத்தில் மும்பை அணி கடும் நெருக்கடி கொடுத்து வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் களத்திற்கு வந்த இளம் வீரர் ரியான் பராக், அஸ்வினுடன் ஜோடி சென்று அபாரமாக விளையாடினார். அஸ்வின் 16 ரன்களில் வெளியேற தனியாலாக நின்ற ரியன் பராக், மும்பை பந்துவீச்சை சிதறடித்தார். அவர் ஐந்து பவுண்டரி, மூன்று இமாலய சிக்சர் என 39 பந்துகளில் 54 ரன்கள் சேர்த்தார்.
இதன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ந்து இரண்டாவது முறையாக அவர் அரை சதம் கடந்தார். இதனால் ராஜஸ்தான் அணி 15 புள்ளி மூன்று ஓவரில் எல்லாம் வெற்றி இலக்கை எட்டியதும் இதன் மூலம் ராஜஸ்தான் அணி ஹாட்ரிக் வெற்றியை பெற்று தற்போது புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து மூன்று போட்டிகளில் தோல்வி தழுவி கடைசி இடத்தில் இன்னும் புள்ளிக் கணக்கை தொடங்காமல் இருக்கிறது.
தொடர்ந்து மும்பை அணி தோல்வியை தழுவி வருவதால் ஹர்திக் பாண்டியா மாற்றப்படலாம் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது. மும்பை அணி தரப்பில் ஆகாஷ் மதுவால் மட்டும் நான்கு ஓவர்கள் வீசி 20 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியது ஆறுதலாக இருந்தது .