மும்பை : இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரரான பும்ரா ஒரு கட்டத்தில் நாட்டை விட்டு வெளியேற நினைத்ததாக அவருடைய மனைவி சஞ்சனா பகீர் கருத்தை தெரிவித்து இருக்கிறார். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சுக்கு ஒரு மறுமலர்ச்சி ஏற்படுத்தியவர் என்றால் அது பும்ரா தான்.
தன்னுடைய வித்தியாசமான பந்துவீச்சு ஸ்டைலால் உலகின் டாப் பேட்ஸ்மேன்களையே மிரள வைத்திருக்கிறார். இந்திய அணி t20 ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெறுகிறது என்றால் அதற்கு பும்ராவின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

மேலும் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஸ்டார் வீரராகவும் விளங்குகிறார். இந்த நிலையில் பேசிய பும்ராவின் மனைவி சஞ்சனா பல அதிர்ச்சிகர தகவலை தெரிவித்து இருக்கிறார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விளையாடுவதற்கு முன்பு பும்ராவுக்கு இந்தியாவை விட்டு வெளியேறும் எண்ணம் இருந்ததாக அவருடைய மனைவி கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், நான் பும்ராவிடம் கேட்டேன். நீங்கள் கனடாவுக்கு சென்று அங்கு ஒரு புதிய வாழ்க்கையை தொடங்க விரும்பினீர்களா என்றேன். அதற்கு பும்ரா, ஒவ்வொரு தெருவிலும் 25 குழந்தைகள் ஆவது இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற கனவில் இருப்பார்கள். எனக்கும் அந்த கனவு இருந்தது.
ஆனால் அது நடைபெறவில்லை என்றால் மாற்று திட்டத்தை ஒன்றையும் நான் வைத்திருந்தேன். அதன்படி கனடாவில் என்னுடைய உறவினர்கள் இருந்ததால், அங்கு சென்று தன்னுடைய பள்ளி படிப்பை முடித்துவிட்டு அங்கு தங்கிவிடலாம் என்று நினைத்தேன். முதலில் ஒரு குடும்பமாக கனடாவுக்கு செல்ல நாங்கள் திட்டமிட்டு இருந்தோம்.
ஆனால் என்னுடைய தாய் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. கனடாவின் கலாச்சாரமும் நமது கலாச்சாரமும் ஒத்து வராது என்று அவர் கூறிவிட்டார். என் தாயின் முடிவால் தான் நான் இந்தியாவிலே தங்கி விட்டேன். அதே சமயம் எனக்கு மும்பை இந்தியன்ஸ் அணியிலும் விளையாட வாய்ப்பு வந்தது.அது மட்டும் நடைபெறவில்லை என்றால், நான் நிச்சயமாக கனடாவுக்கு சென்று கனடாவில் உள்ள கிரிக்கெட் அணிக்காக விளையாடி இருப்பேன் என்று பும்ரா தம்மிடம் கூறியதாக அவருடைய மனைவி சஞ்சனா தெரிவித்துள்ளார்.