மும்பை : ஐபிஎல் 2024 ஆம் சீசனை முன்னிட்டு மினி ஏலத்திற்கு முன்பாகவே குஜராத் அணியின் கேப்டன் பதவியில் இருந்த ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கிவிட்டது. இது பல சர்ச்சைகளையும் விவாதங்களையும் எழுப்பியிருக்கிறது.
விதிப்படிதான் இது நடந்தது என்றாலும் குஜராத் அணி எப்படி ஹர்திக் பாண்டியாவை விட்டது என்றும் மும்பை இந்தியன்ஸ் ஏதேனும் உள்ளடி வேலை செய்து இதனை வாங்கி விட்டதா என்றும் பலரும் சந்தேகங்கள் எழுப்பி வருகின்றனர்.

இந்த போக்கு ஐபிஎல் தொடருக்கு நல்லதல்ல என கே கே ஆர் அணியில் இயக்குனர் ஜாய் பட்டாச்சாரியா தெரிவித்திருக்கிறார். இது குறித்து பேட்டி அளித்துள்ள அவர் தற்போது நடந்து உள்ள சம்பவம் ஐபிஎல் தொடருக்கு ஏற்றது கிடையாது. இதே போல் 2010 ஆம் ஆண்டு ஒரு சம்பவம் நடைபெற்றது. ஜடேஜா தாம் வேறு அணிக்கு செல்ல வேண்டும் என்றும் ராஜஸ்தான் அணிக்காக நான் விளையாட மாட்டேன் என்றும் போர் கொடி தூக்கினார்.
எனினும் அதனை அனுமதிக்காத பிசிசிஐ ஜடேஜாவை ஓராண்டு தடை விதித்தது. காரணம் விதிமுறைகளை யாரும் மீறக் கூடாது என்று தான் பிசிசிஐ அவ்வாறு செய்தது.ஆனால் தற்போது , ஒரு வீரர் உங்கள் அணியில் விளையாடப் பிடிக்கவில்லை. என்னை ஏலத்தில் விட்டு விடுங்கள். ஆனால் ஏலத்தில் என்னை எடுக்காதீர்கள்.உங்கள் அணிக்காக மட்டும் நான் விளையாட மாட்டேன் என்று கூறுவதெல்லாம் சரி கிடையாது.
இது போன்ற நடைமுறையை நாம் ஊக்குவிக்கக் கூடாது.ஏனென்றால் ஐபிஎல் எதிர்காலத்திற்கு இது நல்லது கிடையாது. இதனால் தான் 2010 ஆம் ஆண்டு இந்த சம்பவம் நடைபெற்ற போது நிறுத்தப்பட்டது. ஆனால் தற்போது 2023 ஆம் ஆண்டு ஒரு பெரிய வீரரை இவ்வாறு வேறு அணிக்கு மாற்ற ஐபிஎல் அனுமதித்திருப்பது ஆச்சிரியம் அளிக்கிறது.
இது போன்ற ஒரு நடைமுறையை தொடங்கினால் இனி பலவீரர்களும் இதையே பின்தொடர்வார்கள்.அணியில் தேவையில்லாத பிரச்சினை ஏற்படுத்திவிட்டு அந்த அணி நிர்வாகமே தங்களை விட்டு விட வேண்டும் என நினைக்கத் தொடங்குவார்கள்.இது நிச்சயம் ஐபிஎல் தொடருக்கு நல்ல விஷயமாக இருக்காது என்று கே கே ஆர் அணி இயக்குனர் ஜாய் பட்டாச்சாரியார் கூறியுள்ளார்.