மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஹர்திக் பாண்டியா குஜராத் அணியின் கேப்டனாக இருந்து மீண்டும் மும்பை அணிக்கு சென்றிருப்பது தான் தற்போது பெரும் விவாதமாக இருக்கிறது. ஹர்திக் பாண்டியா செய்தது சரியா? தவறா ?
ஐபிஎல் கோப்பையை வென்ற பிறகு இவ்வாறு முடிவு எடுக்கலாமா என பல விவாதங்களும் விமர்சனங்களும் தற்போது முன்வைக்கப்படுகிறது. இதற்குக் காரணம் ஹர்திக் பாண்டியா ஒரு ஆல் ரவுண்டராக மட்டும்தான் ரசிகர்களால் அறியப்பட்டார்.

ஆனால் மும்பை அவரை கழற்றி விட்ட பிறகு குஜராத் அணி அவருக்கு வாய்ப்பு கொடுத்து கேப்டன் ஆக்கி அழகு பார்த்தது. இதனை பயன்படுத்திக் கொண்ட ஹர்திக் பாண்டியா முதல் சீசனில் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தினார். இதன்மூலம் இந்திய டி20 அணியின் கேப்டனாகவும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இப்படி இருக்கும் போது ஹர்திக் திடீரென்று குஜராத்தை கைவிட்டு மும்பைக்கு சென்றது பல்வேறு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆகாஷ் சோப்ரா, ஹர்திக் பாண்டியாவை விமர்சிக்கும் விதமாக மறைமுகமாக பதிவிட்டுள்ளார். உங்கள் வாழ்க்கையில் ஒரு முறை உங்களுக்கு ஒரு வாய்ப்பு வரும். பணமா இல்லை பாரம்பரியமா என்பதை முடிவெடுக்கும் சூழலில் நீங்கள் தள்ளப்படுவீர்கள். அப்போது நீங்கள் எதை தேர்வு செய்கிறீர்களோ அதுதான் உங்கள் வாழ்க்கையை நீங்கள் யாரென்று விவரிக்கும் என்று கூறியிருக்கிறார்.
குஜராத் அணிக்கு சாம்பியன் பட்டத்தை வென்று விட்டு புதிய பாரம்பரியத்தை உருவாக்கிக் கொண்டிருந்த நிலையில் ஹர்திக் பணத்திற்காக சென்று விட்டார் என மறைமுகமாக ஆகாஷ் சோப்ரா விமர்சித்திருக்கிறார்.இந்த நிலையில் rcb அணியின் சாதாரண வீரராக இருந்து பிறகு கேப்டனாக உருவான கோலிக்கு வேறு அணிக்கு மாற பல வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் ஆர் சி பி அணி மீது வைத்திருந்த விசுவாசம் காரணமாக இதுவரை மாறாமல் அங்கேயே தொடர்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.