லக்னோ : லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியின் ஜடேஜா நம்பர் 4 பேட்ஸ்மேனாக களமிறங்கியுள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல் பவுலிங்கை தேர்வு செய்தார். சிஎஸ்கே அணியின் தரப்பில் மிட்சல் மற்றும் தாக்கூர் நீக்கப்பட்டு தீபக் சஹர் மற்றும் மொயின் அலி ஆகியோர் சேர்க்கப்பட்டனர். அதேபோல் லக்னோ அணி தரப்பில் மேட் ஹென்ரி சேர்க்கப்பட்டுள்ளார்.

இதன்பின் சிஎஸ்கே அணி தரப்பில் ரஹானே - ரச்சின் ரவீந்திரா கூட்டணி தொடக்கம் கொடுத்தது. லக்னோ அணி தரப்பில் ஹென்ரி பவுலிங் செய்ய வந்தார். இந்த ஓவரில் 4 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில், 2வது ஓவரை வீச மோசின் கான் வந்தார். அவர் வீசிய முதல் பந்திலேயே ரச்சின் ரவீந்திரா போல்டாகி டக் அவுட்டில் வெளியேறினார். இதன்பின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் களத்திற்கு வந்தார்.
இவர்கள் இருவரும் அதிரடியாக ரன்கள் சேர்த்த நிலையில், 4 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 29 ரன்கள் சேர்த்திருந்தது. அப்போது 5வது ஓவரை வீச யாஷ் தாக்கூர் வந்தார். அவர் வீசிய 2வது பந்தில் கேப்டன் ருதுராஜ் 13 பந்துகளில் 17 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இதன்பின் சிவம் துபே அல்லது மொயின் அலி களமிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில், ஆச்சரியமளிக்கும் வகையில் ரவீந்திர ஜடேஜா களம் புகுந்தார்.
பவர் பிளே ஓவர்களில் வேகப்பந்துவீச்சாளர்கள் அட்டாக்கில் இருந்ததால், சிவம் துபேவை சிஎஸ்கே அணி மறைத்து வைத்துள்ளதாக பார்க்கப்படுகிறது. அதேபோல் ரவீந்திர ஜடேஜாவுக்கு இந்த சீசனில் பெரியளவில் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் அவரை பேட்டிங் செய்ய வைப்பதற்காகவும் முடிவு எடுக்கப்பட்டதாக பார்க்கப்படுகிறது. டி20 கிரிக்கெட்டில் 317 போட்டிகளில் விளையாடியுள்ள ரவீந்திரா ஜடேஜா இதுவரை 15 முறை மட்டும் நம்பர் 4 பேட்ஸ்மேனாக களமிறங்கியுள்ளார்.
கடைசியாக 2022ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆசியக் கோப்பை போட்டியில் ஜடேஜா நம்பர் 4 பேட்ஸ்மேனாக களமிறங்கினார். அதேபோல் ஜடேஜா பவர் பிளேவில் பெரியளவில் இதுவரை விளையாடிய அனுபவம் கிடையாது. மொத்தமாகவே 56 ரன்கள் மட்டுமே பவர் பிளேவில் ஜடேஜா சேர்த்துள்ளார். இதனால் ஜடேஜாவின் செயல்பாடுகள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.