மும்பை : சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதை பற்றி இன்னும் துளியளவு கூட யோசிக்கவில்லை என்று இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 37வது பிறந்தநாளை விரைவில் கொண்டாடவுள்ளார். இந்த சீசனில் மும்பை அணியின் கேப்டன்சி பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள ரோகித் சர்மா, பேட்ஸ்மேனாக அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதன் மூலம் டி20 உலகக்கோப்பை தொடரை குறி வைத்து ரோகித் சர்மா செயல்பட்டு வருவதாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஓய்வு குறித்து ரோகித் சர்மா பேசி இருக்கிறார். தனியார் யூட்யூப் சேனலுக்கு ரோகித் சர்மா அளித்துள்ள பேட்டியில், இதுவரை ஓய்வு குறித்து நான் யோசித்ததே இல்லை. வாழ்க்கை போகும் வழியில் நானும் சென்று கொண்டிருக்கிறேன். இந்த நேரத்தில் எனது பேட்டிங் ஃபார்ம் நன்றாக இருப்பதாக நினைக்கிறேன். இதனை இன்னும் சில ஆண்டுகள் தொடர வேண்டும் என்பதே ஆசை.
அதன்பின் என்ன திட்டம் என்பது தெரியவில்லை. இந்திய அணிக்காக உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்பது தான் எனக்கு ஆசை. 2025ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வருகிறது. அதனை இந்திய அணி வெல்லும் என்று நம்புகிறேன். உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி வரை நாங்கள் சிறப்பாக விளையாடினோம். அரையிறுதி போட்டியில் வென்ற பின், இன்னும் ஒரு அடி மட்டுமே உள்ளதை நினைத்து மகிழ்ச்சியாக இருந்தோம்.
அதற்கு தேவையான அனைத்து பணிகளையும் செய்தோம். ஆனால் உலகக்கோப்பை தொடரில் இறுதிப்போட்டியில் நாங்கள் என்ன தவறு செய்தோம் என்று தெரியவில்லை. ஒரேயொரு நாள் எங்களுக்கு மோசமான நாளாக அமைந்தது. அது சரியாக இறுதிப்போட்டியில் அமைந்தது. நாங்கள் மோசமாக விளையாடினோம் என்பதை விடவும், ஆஸ்திரேலியா அணி சிறந்த கிரிக்கெட்டை ஆடியது என்று நினைப்பதாக தெரிவித்துள்ளார்.
ஜூன் மாதத்தில் நடக்கும் டி20 உலகக்கோப்பை தொடரை இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் விளையாடவுள்ளது. இதற்காக 14 மாதங்களுக்கு பின் ரோகித் சர்மா டி20 அணியில் கம்பேக் கொடுத்தார். தற்போது நல்ல பேட்டிங் ஃபார்மில் இருக்கும் ரோகித் சர்மா, இந்திய அணிக்காக டி20 உலகக்கோப்பையை வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.