மும்பை : மும்பை அணியின் நட்சத்திர வீரர் ரோகித் சர்மா பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு வந்தபோது, திடீரென பந்தை கையில் எடுத்து ஹர்பஜன் சிங் பவுலிங் செய்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடரின் 51வது லீக் போட்டியில் கேகேஆர் அணியை எதிர்த்து மும்பை அணி விளையாடுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங்கை தேர்வு செய்தார். ஏற்கனவே மும்பை அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு சிக்கலில் உள்ள நிலையில், பல்தான்ஸ் மீண்டெழுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த போட்டிக்கு முன் நட்சத்திர வீரர் ரோகித் சர்மா பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். இந்த சீசனில் ரோகித் சர்மாவின் கேப்டன்சி பறிக்கப்பட்டதால், வீட்டில் இருந்தவாறே ரோகித் சர்மா பயிற்சி முகாமில் பங்கேற்று வருகிறார். காலை மற்றும் மாலையில் பயிற்சியில் ஈடுபட்டு வரும் ரோகித் சர்மா, டீம் மீட்டிங்கில் முடிந்த அளவிற்கு பங்களிப்பு வழங்கி வருகிறார்.
இதனால் குடும்பத்தினர் மற்றும் மகளுடன் நீண்ட நேரம் செலவிட முடிவதாக ரோகித் சர்மா நெகிழ்ச்சி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ரோகித் சர்மா பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்ட போது, வர்ணனைக்காக மைதானத்திற்கு வந்தார் ஹர்பஜன் சிங். அப்போது ரோகித் சர்மாவை பார்த்த ஹர்பஜன் சிங், திடீரென பந்தை கையில் எடுத்து பவுலிங் செய்ய தொடங்கினார்.

சில நிமிடங்கள் ரோகித் சர்மாவுக்கு ஹர்பஜன் சிங் பவுலிங் செய்தது மைதானத்தில் இருந்த ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஏனென்றால் மும்பை அணியின் முதல் கேப்டன் ஹர்பஜன் சிங் தான். சச்சின் டெண்டுல்கர் காயமடைந்தால், துணைக் கேப்டனாக ஹர்பஜன் சிங் தான் செயல்பட்டார்.
அதேபோல் மும்பை அணியின் உரிமையாளர் நீடா அம்பானியுடன் நெருங்கிய நட்பில் இருப்பவர் ஹர்பஜன் சிங். இதனால் களத்திற்கு வெளியேயும் மும்பை அணிக்கு தொடர்ச்சியாக ஹர்பஜன் சிங் ஆதரவு தெரிவித்து வருகிறார். மேலும், ரோகித் சர்மாவுக்கு பவுலிங் செய்த ஹர்பஜன் சிங்கின் வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.