கொல்கத்தா : அடுத்த ஐபிஎல் தொடரில் ரோகித் சர்மா மும்பை அணியில் இருக்க மாட்டார் என்று தோன்றுவதாக பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரம் கணித்துள்ளார்.
அண்மையில் வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மும்பை அணியை வீழ்த்தி கேகேஆர் அணி அபார வெற்றியை பெற்றது. இதன் மூலமாக 12 ஆண்டுகளுக்கு பின் மும்பை அணியை அதன் மைதானத்தில் வீழ்த்தி கொல்கத்தா அணி புதிய வரலாறு படைத்துள்ளது. இந்த போட்டிக்கு பின் கேகேஆர் அணியின் சிஇஓ வெங்கி மைசூர் ரோகித் சர்மாவுடன் நீண்ட நேரம் ஆலோசனை மேற்கொண்டார்.

அதுமட்டுமல்லாமல் கேகேஆர் அணியின் நிர்வாகிகள் பலரும் ரோகித் சர்மாவுடன் நீண்ட ஆலோசனையில் ஈடுபட்டனர். ஏற்கனவே மும்பை அணியின் கேப்டன் பதவியில் இருந்து அம்பானி குடும்பத்தினர் ரோகித் சர்மாவை நீக்கினர். இந்திய அணியின் கேப்டனாக இருந்தும் ரோகித் சர்மாவை அம்பானி குடும்பம் அவமானப்படுத்தியதாக கருதப்பட்டது.
இந்த நிலையில் அடுத்த சீசனுக்கு முன் மெகா ஏலம் நடத்தப்படவுள்ளது. வழக்கமாக மெகா ஏலம் வரும் போது, 4 வீரர்களை ஒரு அணியால் தக்க வைக்க முடியும். 2 வீரர்களுக்கு ஆர்டிஎம் கார்டை பயன்படுத்த முடியும். அதன்படி பார்த்தால் ஹர்திக் பாண்டியா, பும்ரா, சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட் ஆகிய 4 பேரை மட்டுமே மும்பை அணியால் தக்க வைக்க முடியும்.
திலக் வர்மா, ரோகித் சர்மா, இஷான் கிஷன் ஆகியோரில் 2 பேருக்கு மட்டுமே ஆர்டிஎம் கார்டை பயன்படுத்த முடியும். இதனால் ரோகித் சர்மாவின் சம்பளம் குறைய வாய்ப்புகள் உள்ளதோடு, ஹர்திக் பாண்டியாவுக்கு கீழ் மீண்டும் விளையாட வேண்டிய நிலை வரும். இதனால் ரோகித் சர்மா மும்பை அணியில் தொடர்வதற்கான வாய்ப்புகள் குறைவு என்றே பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து கேகேஆர் முன்னாள் பயிற்சியாளர் வாசிம் அக்ரம் பேசுகையில், அடுத்த சீசனில் ரோகித் சர்மா மும்பை அணியுடன் இருக்க மாட்டார் என்று தோன்றுகிறது. அவர் கேகேஆர் அணியில் இணைய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள், ரோகித் சர்மா தொடக்க வீரர், கம்பீர் ஆலோசகர், கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர். கேகேஆர் அணியின் பேட்டிங் வேறு மாதிரி இருக்கும். கொல்கத்தா பிட்சில் ரோகித் சர்மா எப்போதும் வேற லெவலில் பேட்டிங் செய்வார் என்று தெரிவித்துள்ளார்.