மும்பை : கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி வெற்றிபெற 170 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரின் 51வது லீக் போட்டியில் மும்பை அணியை எதிர்த்து கொல்கத்தா அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு சுனில் நரைன் - பில் சால்ட் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. மும்பை அணி தரப்பில் நுவான் துஷாரா முதல் ஓவரை வீசினார்.

முதல் ஓவரிலேயே அதிரடி வீரர் சால்ட் 5 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த ரகுவன்ஷி 13 ரன்களிலும், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கண்மூடி திறப்பதற்குள் கொல்கத்தா அணி 3 ஓவர்களில் 28 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன்பின் கொல்கத்தா அணி சுதாரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, சுனில் நரைன் 8 ரன்களிலும், ரிங்கு சிங் 9 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
57 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து கேகேஆர் அணி தடுமாறிய போது, உடனடியாக இம்பேக்ட் பிளேயராக மணிஷ் பாண்டே களமிறக்கப்பட்டார். இவரும் வெங்கடேஷ் ஐயரும் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் 10 ஓவர்களில் கேகேஆர் அணியின் ஸ்கோர் 83 ரன்களாக உயர்ந்தது. இதன்பின் வெங்கடேஷ் ஐயர் சில பவுண்டரிகளை அடிக்க, மறுமுனையில் மணிஷ் பாண்டேவும் பவுண்டரிகளை விளாச தொடங்கினார்.
சிறப்பாக விளையாடிய வெங்கடேஷ் ஐயர் 36 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். மறுமுனையில் அதிரடிக்கு திரும்பிய மணிஷ் பாண்டே, 31 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதன்பின் அதிரடி வீரர் ரஸ்ஸல் களத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் வெங்கடேஷ் ஐயர் செய்த தவறால், ரஸ்ஸல் 7 ரன்களில் ரன் அவுட்டாகி வெளியேறினார். இதனால் கேகேஆர் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் வந்த ரமன்தீப் சிங் பும்ராவை அட்டாக் செய்ய முயன்று 2 ரன்களிலும், ஸ்டார்க் டக் அவுட்டாகியும் வெளியேறினர். இதனால் 18 ஓவர்களில் கேகேஆர் அணி 155 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடர்ந்து துஷாரா வீசிய 19வது ஓவரில் 12 ரன்கள் சேர்க்கப்பட, கடைசி ஓவரை வீச பும்ரா வந்தார். இந்த ஓவரின் 5வது பந்தில் வெங்கடேஷ் ஐயர் போல்டாகினார். இதனால் கேகேஆர் அணி 19.3 ஓவர்களில் 169 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. சிறப்பாக பவுலிங் செய்த பும்ரா மற்றும் துஷாரா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.