மும்பை : கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணியின் பேபி மலிங்கா பவர் பிளே ஓவர்களுக்குள் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியது ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது.
வான்கடே மைதானத்தில் நடந்து வரும் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங்கை தேர்வு செய்தார். வான்கடே மைதானத்தில் முதல் 20 நிமிடங்கள் நல்ல ஸ்விங் இருக்கும் என்பதால், மும்பை அணி பவுலிங்கை தேர்வு செய்தது.

இதன்பின் கேகேஆர் அணி தரப்பில் பில் சால்ட் - சுனில் நரைன் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. முதல் ஓவரை வீச இளம் வீரர் துஷாரா வந்தார். இந்த ஓவரின் 4வது பந்தில் துஷாராவின் பந்தை கணிக்காமல் பில் சால்ட் பேட்டை வேகமாக சுழற்ற, அது எட்ஜாகி மேலே பறந்தது. அதனை சரியாக கணித்து திலக் வர்மா பிடித்தார். இதனால் பில் சால்ட் 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனைத் தொடர்ந்து துஷாரா வீசிய 3வது ஓவரின் முதல் பந்திலேயே ரகுவன்ஷி சிக்சர் அடித்து தொடங்கினார். ஆனால் அடுத்த பந்திலேயே துஷாரா வேகத்தை கொஞ்சம் குறைத்து வீசியதை கணிக்காமல், ரகுவன்ஷி பவுண்டரி அடிக்க முயற்சித்து 13 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அதே ஓவரின் கடைசி பந்தில் வெறும் 6 ரன் எடுத்து வெளியேறினார்.

இதனால் கேகேஆர் அணி 28 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதற்கு முக்கிய காரணமாக மும்பை அணியின் பேபி மலிங்காவான துஷாரா அமைந்துள்ளார். மலிங்காவின் இடத்தை நிரப்ப மும்பை அணி நிர்வாகம் துஷாராவை கொண்டு வந்தது. ஆனால் அவர் பவுலிங் கடந்த சில போட்டிகளில் சொதப்பலாக அமைந்த நிலையில், இன்று தனது திறமையை நிரூபித்துள்ளார்.
ஏற்கனவே குட்டி மலிங்கா என்று கொண்டாடப்பட்ட சிஎஸ்கே வீரர் பதிரானா காயம் காரணமாக சில போட்டிகளில் ஓய்வெடுத்து வருகிறார். ஆனால் துஷாராவுக்கு காயம் தொடர்பான பிரச்சனைகள் இல்லை. இதனால் ரியல் பேபி மலிங்கா மும்பை அணியின் துஷாரா தான் என்றும், பயிற்சியாளராக மலிங்கா இருப்பதால், துஷாராவின் பவுலிங் இன்னும் பலம் பெறும் என்றும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.