மும்பை : ரோகித் சர்மாவின் முதுகில் சிறிய காயம் ஏற்பட்டதன் காரணமாகவே இம்பேக்ட் பிளேயராக களமிறக்கப்பட்டதாக மும்பை வீரர் பியூஷ் சாவ்லா தெரிவித்துள்ளார்.
கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணியின் முன்னாள் கேப்டனான ரோகித் சர்மா இம்பேக்ட் பிளேயராக களமிறக்கப்பட்டார். சமீபத்தில் இம்பேக்ட் பிளேயராக விதி ஏற்புடையதல்ல என்ற பேசிய ரோகித் சர்மாவையே, மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா இம்பேக்ட் பிளேயராக களமிறக்கியது ரசிகர்களிடையே விமர்சனத்தை ஏற்படுத்தியது.

ஏற்கனவே மும்பை அணி வீரர்கள் மத்தியில் ஹர்திக் பாண்டியாவுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படவில்லை என்ற பேச்சு இருந்தது. அதேபோல் போட்டியின் போது ஹர்திக் பாண்டியாவை கடந்து ரோகித் சர்மாவின் செயல்பாடுகள் மீதே கேமராவின் கவனமும் இருந்து வந்தது. இதனால் ரோகித் சர்மா மீது கவனம் செல்லாமல் இருக்க ஹர்திக் பாண்டியா வேண்டுமென்றே இம்பேக்ட் பிளேயராக ரோகித் சர்மாவை களமிறக்கியதாக கூறப்பட்டது.
இதன்பின் தொடக்க வீரராக களமிறங்கிய ரோகித் சர்மா 12 பந்துகளில் 11 ரன்கள் எடுத்து சுனில் நரைன் பவுலிங்கில் ஆட்டமிழந்தார். சுனில் நரைன் பவுலிங்கில் ரோகித் சர்மா ஆட்டமிழப்பது 10வது முறையாகும். இதனால் ரோகித் சர்மாவின் பேட்டிங் மீதும் விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் ரோகித் சர்மா இம்பேக்ட் பிளேயராக களமிறக்கப்பட்டதற்கான காரணம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மும்பை அணியின் சீனியர் வீரரான பியூஷ் சாவ்லா பேசுகையில், கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டிக்கு முன் ரோகித் சர்மாவுக்கு முதுகு பிடிப்பு இருந்தது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரோகித் சர்மாவை ஃபீல்டிங் செய்ய வைக்க வேண்டும் என்று முடிவு எடுத்தோம். இதன் காரணமாகவே ரோகித் சர்மா இம்பேக்ட் பிளேயராக களமிறங்கியதாக தெரிவித்தார்.
இதனிடையே மும்பை அணியின் ஒன் பேமிலிக்குள் சில பிரிவினை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த பின் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, பும்ரா உள்ளிட்ட வீரர்கள் எந்தவித சோகமும் இல்லாமல் இருந்தது ரசிகர்களிடையே விவாதமாகி உள்ளது.