மும்பை : கேகேஆர் அணியின் சுனில் நரைன் பவுலிங்கில் 10வது முறையாக ரோகித் சர்மா ஆட்டமிழந்து வெளியேறி இருக்கிறார்.
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி விளையாடி வருகிறது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய கொல்கத்தா அணி 19.5 ஓவர்களில் 169 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. அதிகபட்சமான வெங்கடேஷ் ஐயர் 52 பந்துகளில் 70 ரன்களை சேர்த்தார். மும்பை அணி தரப்பில் பும்ரா மற்றும் துஷாரா இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இந்த போட்டியில் மும்பை அணியின் இம்பேக்ட் பிளேயராக ரோகித் சர்மா களமிறங்கினார். இதனால் பவுலிங்கின் போது ஃபீல்டிங் செய்யாமல் நேரடியாக தொடக்க வீரராக இஷான் கிஷனுடன் இணைந்து ரோகித் சர்மா களம் புகுந்தார். அப்போது வான்கடே மைதானத்தில் இருந்த ரசிகர்கள் ரோகித்.. ரோகித் என்று கோஷம் எழுப்பி ஆதரவளித்தனர்.
இந்த நிலையில் ரோகித் சர்மாவின் விக்கெட் வீழ்த்த கேகேஆர் அணி மிட்சல் ஸ்டார்க்கை கொண்டு வந்தது. ஆனால் ஸ்டார்க்கை எளிதாக விளையாடி ரோகித் சர்மா அசத்தினார். ஆனால் இதன்பின் தான் ரோகித் சர்மாவுக்கு ரியல் டெஸ்ட் வைக்கப்பட்டது. ஏனென்றால் ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணியின் சுனில் நரைனின் ரோகித் சர்மா 9 முறை ஆட்டமிழந்திருக்கிறார்.
இதனால் சுனில் நரைன் பவுலிங்கை எப்படி சமாளிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. மும்பை அணி 5 ஓவர்கள் முடிவில் 41 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், பவர் பிளேவின் கடைசி ஓவரை வீச சுனில் நரைன் வந்தார். இந்த ஓவரின் 5வது பந்தில் சுனில் நரைனை அட்டாக் செய்ய முயன்று ரோகித் சர்மா பேட்டை விளாசினார்.
ஆனால் அது மிட் விக்கெட் அருகில் நின்றிருந்த மணிஷ் பாண்டேவின் கைகளில் சென்று விழுந்தது. இதனால் ரோகித் சர்மா 12 பந்துகளில் 11 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதுமட்டுமல்லாமல் 10வது முறையாக நரைன் பவுலிங்கில் ரோகித் சர்மா அவுட்டானார். இதன் மூலமாக ஐபிஎல் தொடரில் அதிக முறை ஒரே பவுலரிடம் ஆட்டமிழந்த வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா சமன் செய்துள்ளார். இதற்கு முன் பொல்லார்டை பிராவோ 10 முறை வீழ்த்தியதே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.