மும்பை : லக்னோ அணிக்கு எதிராக களமிறங்கிய மும்பை அணியின் இளம் வீரர் அர்ஜூன் டெண்டுல்கர், 2.2 ஓவர்களோடு ஓய்வறைக்கு திரும்பியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் 67வது லீக் போட்டியில் லக்னோ அணியை எதிர்த்து மும்பை அணி களமிறங்கியுள்ளது. இந்த போட்டியில் மும்பை அணியின் நட்சத்திர வீரர் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக இளம் வீரர் அர்ஜூன் டெண்டுல்கர் களமிறக்கப்பட்டார். இந்த சீசனில் அர்ஜூன் டெண்டுல்கர் முதல்முறையாக களமிறங்கியது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

கடந்த சீசனில் புதிய பந்தில் ஸ்விங் செய்ய முடியும் என்று அர்ஜூன் டெண்டுல்கர் நிரூபித்ததால், இந்த போட்டியில் 2வது ஓவரை வீச அழைக்கப்பட்டார். இந்த ஓவரில் 3 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்த அர்ஜூன் டெண்டுல்கர், கடைசி பந்தில் ஆக்ரோஷமாக பந்தை எடுத்து ஸ்டாய்னிஸை வீழ்த்த முயற்சித்தார். இதனை பார்த்த ஸ்டாய்னிஸ், ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார்.
தொடர்ந்து 5வது ஓவரை வீச வந்த அர்ஜூன் டெண்டுல்கர், 7 ரன்களை விட்டுக் கொடுத்தார். இதனால் 2 ஓவர்களில் 10 ரன்களை மட்டுமே அர்ஜூன் டெண்டுல்கர் விட்டுக் கொடுத்திருந்தார். பின்னர் 15வது ஓவரை வீச அர்ஜூன் வந்தார். இந்த ஓவரின் முதல் பந்தை வீசுவதற்கு முன்பே காலில் பிடிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து வீசப்பட்ட 2 பந்துகளும் டாஸ் பாலாக வீசப்பட்ட நிலையில், இரண்டிலும் சிக்சர் விளாசி பூரன் அதிர்ச்சி கொடுத்தார்.
இதனால் பீதியடைந்த அர்ஜூன் டெண்டுல்கர் உடனடியாக ஓய்வறையை நோக்கி நடந்தார். இதனால் மொத்தமாக 2.2 ஓவர்களில் 22 ரன்களை அர்ஜூன் டெண்டுல்கர் வெளியேறினார். கடந்த சீசனை காட்டிலும் அர்ஜூன் டெண்டுல்கர் கொஞ்சம் கூடுதல் வேகத்தில் வீசியதை பார்க்க முடிந்தது. ஆனால் ரன் அப்பில் மாற்றம் செய்யாமல் அர்ஜூன் டெண்டுல்கர் பவுலிங் செய்தது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
சில பந்துகளில் 139 கிமீ வேகத்தில் வீசப்பட்டாலும், பெரும்பாலான பந்துகள் 130 கிமீ வேகத்திற்கு மேல் வீசப்படவில்லை. இதனால் அர்ஜூன் டெண்டுல்கர் இன்னும் முழுமையாக தயாராகவில்லை என்றே பார்க்கப்படுகிறது. இதனால் சச்சின் டெண்டுல்கரின் மகன் என்பதாலேயே அர்ஜூன் டெண்டுல்கருக்கு மும்பை அணியில் வாய்ப்பு வழங்கப்படுவதாக விமர்சனங்கள் அதிகரித்துள்ளது.