மும்பை : மும்பை அணியின் ஜெர்சியில் நட்சத்திர வீரர் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ் இருவரும் கடைசி போட்டியில் விளையாட உள்ளனர் என்று ரசிகர்கள் சோசியல் மீடியாவில் கருத்து கூறி வருகின்றனர்.
ஐபிஎல் தொடரின் 67வது லீக் போட்டியில் லக்னோ அணியை எதிர்த்து மும்பை அணி விளையாடவுள்ளது. ஏற்கனவே லக்னோ மற்றும் மும்பை அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்துவிட்ட நிலையில், கடைசி போட்டியில் விளையாடவுள்ளன. இதனால் ஆறுதல் வெற்றிக்காக இரு அணிகளும் போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ரசிகர்களிடையே மும்பை அணிக்காக நட்சத்திர வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் சூர்யகுமார் இருவரும் கடைசி முறையாக விளையாடுகிறார்கள் என்று கருத்து நிலவி வருகிறது. ஏனென்றால் கேப்டன்சியில் இருந்து ரோகித் சர்மாவை நீக்கியது ரோகித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் உள்ளிட்டோரை அதிருப்தியடைய செய்தது.
ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக பொறுப்பேற்ற போது 5 நிமிடங்களுக்குள் வாழ்த்து கூறிய சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியாவுக்கு ஆதரவாக ஒரு ட்வீட்டை கூட பதிவிடவில்லை. கடந்த சீசனில் ரோகித் சர்மா இல்லாத போது சூர்யகுமார் யாதவ் தலைமையில் தான் மும்பை அணி களமிறங்கியது. இதனால் அடுத்த கேப்டனாக சூர்யகுமார் யாதவ் அல்லது பும்ரா இருவரில் ஒருவர் இருப்பார்கள் என்ற கருதப்பட்டது.
ஆனால் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக கொண்டு வந்ததால், மும்பை அணி இரு பிரிவாக பிரிந்துள்ளனர். இந்திய வீரர்கள் பலரும் ரோகித் சர்மாவின் பேச்சையும், வெளிநாட்டு வீரர்கள் அனைவரும் ஹர்திக் பாண்டியாவின் பேச்சையும் கேட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த சூழலில், அடுத்த ஐபிஎல் தொடருக்கு முன் மெகா ஏலம் நடக்கவுள்ளது.
இதனால் ரோகித் சர்மாவின் சம்பளத்தை குறைக்க முடியாது என்பதால், அவரை மும்பை அணி கழற்றிவிட வாய்ப்புகள் உள்ளது. அதேபோல் கடந்த சீசனை போல் குறைந்த தொகைக்கு சூர்யகுமார் யாதவை ஒப்பந்தம் செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால் இருவரும் மும்பை அணியில் இருந்து நிச்சயம் வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரசிகர்கள் பலரும் சோகத்தில் உள்ளனர்.