மும்பை : மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவை கழற்றிவிட அம்பானி குடும்பம் தயாராகிவிட்டதாக தெரிய வந்துள்ளது.
ஐபிஎல் தொடரில் இருந்து முதல் அணியாக மும்பை அணி வெளியேற்றப்பட்டுள்ளது. ஹர்திக் பாண்டியா தலைமையில் களமிறங்கிய மும்பை அணி, 13 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி, 9 தோல்வி உட்பட 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. தொடர்ச்சியாக 4 சீசன்களாக மும்பை அணி கோப்பையை வெல்ல முடியாமல் திணறி வருகிறது.

இந்த நிலையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்பாக மெகா ஏலம் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தக்க வைக்கப்படும் வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு அணிகளும் அறிவுறுத்தி வருகின்றன. ஆனால் தக்க வைக்கப்படும் வீரர்களின் எண்ணிக்கையை அதிகரித்தால், ஐபிஎல் தொடரின் சுவாரஸ்யம் குறைந்துவிடும் என்று ஐபிஎல் நிர்வாகக் குழு பார்க்கிறது.
இதனால் கடந்த மெகா ஏலத்தில் பின்பற்றப்பட்ட 3+1 என்ற 3 இந்திய வீரர்கள் மற்றும் ஒரு வெளிநாட்டு வீரர் என்ற அளவிலேயே தொடர வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது. அதேபோல் மெகா ஏலத்தில் ஆர்டிஎம் கார்டு 2 வீரர்களை பயன்படுத்தி கொள்ளும் உரிமையை மீண்டும் வழங்கவும் திட்டமிடப்பட்டு வருகிறது. இதனால் 6 வீரர்களை மட்டுமே தக்க வைக்கப்படும்.
இவ்வாறு விதிகள் தொடரும் பட்சத்தில், மும்பை அணி புதிய சிக்கலில் சிக்கியுள்ளது. அதாவது கேப்டன் ஹர்திக் பாண்டியா, பும்ரா, சூர்யகுமார் யாதவ் ஆகிய மூவரையும் தக்க வைக்கும் சூழலில், டிம் டேவிட்டை 4வது வீரராக தக்க வைக்க வாய்ப்புகள் உள்ளது. அதேபோல் ஆர்டிஎம் கார்டினை திலக் வர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகியோருக்கு பயன்படுத்தவும் வாய்ப்புகள் உள்ளது.
அப்படியென்றால் ரோகித் சர்மாவை மும்பை அணி பெரும் தொகை கொடுத்து வாங்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படும். ஆனால் ரோகித் சர்மா 37 வயதினை எட்டிவிட்டதால், அடுத்த மெகா ஏலம் வரைக்கும் நல்ல பேட்டிங் ஃபார்முடன் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் அடுத்த சீசனில் ரோகித் சர்மா மும்பை அணி அல்லாமல் வேறு அணியில் விளையாடவே அதிக வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்படுகிறது.