மும்பை : ஐபிஎல் தொடரில் அதிக முறை டக் அவுட்டான வீரர்கள் பட்டியலில் மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா சாதனை படைத்துள்ளார்.
2022ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் மும்பை அணிக்காக ஆடி வந்த ட்ரெண்ட் போல்ட்-ஐ ரூ.8 கோடிக்கு ராஜஸ்தான் அணி ஒப்பந்தம் செய்தது. ரூ.7.75 கோடி வரை மும்பை அணி ஏலத்தில் சவால் கொடுத்த போதும், ராஜஸ்தான் அணி அவரை தட்டி தூக்கியது. இருப்பினும் இங்கிலாந்து அணியின் ஆர்ச்சரை ரூ.8 கோடி கொடுத்து மும்பை அணி வாங்கியது.

காயம் காரணமாக ஒரு சீசன் விளையாட மாட்டார் என்று தெரிந்தும் மும்பை அணி ரிஸ்க் எடுத்தது. மும்பை அணி நிர்வாகிகள் செய்த தவறுக்கு மும்பை அணி பேட்ஸ்மேன்கள் இன்று வரை பலனை அனுபவித்து வருகிறார்கள். ஏனென்றால் ஐபிஎல் தொடரில் முதல் 6 ஓவர்களில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் 5 இடங்களில் போல்ட் 56 விக்கெட்டுகளுடன் 3வது இடத்தில் இருக்கிறார்.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் மும்பை அணி முதலில் பேட்டிங் விளையாடி வருகிறது. இதில் மும்பை அணி தரப்பில் ரோகித் சர்மா - இஷான் கிஷன் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. ஏற்கனவே இடதுகை பவுலர்களுக்கும் ரோகித் சர்மாவுக்கும் கொஞ்சம் கூட பொருந்தாது. பந்தை கொஞ்சம் ஸ்விங் செய்தாலும் ரோகித் சர்மா எளிதாக வீழ்ந்துவிடுவார்.
இந்த நிலையில் ராஜஸ்தான் அணி தரப்பில் இரு இடதுகை பவுலர்களுடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. முதல் ஓவரை போல்ட் வீசினார். இந்த ஓவரின் முதல் 4 பந்துகளை இஷான் கிஷன் எதிர்கொண்டு ஒரு ரன்னை எடுத்தார். இதன்பின் 5வது பந்தை எதிர்கொள்ள ரோகித் சர்மா தயாரானார். அவர் பந்தை இன்-ஸ்விங் செய்வார் என்று ரோகித் சர்மா பேட்டை வெளியே கொண்டு வந்தார்.
ஆனால் போல்ட் பந்தை அவுட் ஸ்விங் செய்து வெளியே கொண்டு போனார். இதனால் அவுட் சைட் எட்ஜாகி சஞ்சு சாம்சனால் கேட்ச் பிடிக்கப்பட்டது. இதனால் ரோகித் சர்மா டக் அவுட்டாகி வெளியேறினார். இதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா புதிய சாதனையை படைத்துள்ளார். ஐபிஎல் தொடரில் அதிக முறை டக் அவுட்டான வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா 17 முறை டக் அவுட்டாகி முதலிடத்தை பிடித்துள்ளார்.
இவருடன் ஆர்சிபி அணியின் அனுபவ வீரர் தினேஷ் கார்த்திக்கும் 17 முறை டக் அவுட்டாகி முதலிடத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து 2வது இடத்தில் 15 முறை டக் அவுட்டாகி மேக்ஸ்வெல், பியூஷ் சாவ்லா, மன்தீப் சிங் மற்றும் சுனில் நரைன் ஆகியோர் உள்ளனர். இதனால் ஹிட்மேன் ரோகித் சர்மா ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.