மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி ஓவரில் சிஎஸ்கே அணியின் ஸ்டார் வீரர் தோனி ஹாட்ரிக் சிக்ஸர் அடித்ததால் இலக்கு 200 ரன்களை தாண்டியது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து சிஎஸ்கே அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய ரகானே ஐந்து ரன்களிலும் ரச்சின் ரவீந்திரா 21 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.

இதனை அடுத்து நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ருதுராஜ் மற்றும் சிவம் துபே ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். சிஎஸ்கே அணி தடுமாறப்போகிறது என எதிர்பார்த்த நிலையில், ருதுராஜ் பட்டையை கிளப்பினார். 33 பந்துகளில் அரை சதம் கடந்த ருதுராஜ் இன்று சதம் அடிக்கப் போகிறார் என ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்தனர்.
ஆனால் பாண்டியா பந்தை தூக்கி அடிக்க முற்பட்டபோது அது கேட்ச் ஆக மாறியது. ருதுராஜ் 40 பந்துகளில் 69 ரன்கள் சேர்த்தார். இதில் 5 சிக்சர்களும் ஐந்து பௌண்டர்களும் அடங்கும். மறுபுறம் சிவம் துபே தன்னுடைய இயல்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.பத்து பவுண்டரி, 2 சிக்சர் என ருத்ரதாண்டவம் ஆடிய சிவம் துபே 38 பந்துகளில் 66 ரன்கள் சேர்த்தார்.
டாரல் மிட்செல் வழக்கம் போல் சொதப்பி 14 பந்துகளில் 17 ரன்கள் சேர்க்க கடைசி ஓவரில் களமிறங்கிய தோனி 3 இமாலய ஹார்ட்ரிக் சிக்ஸர்களை அடித்தார். இதன் மூலம் சிஎஸ்கே அணியின் ஸ்கோர் 206 என எட்டியது. ஒரு கட்டத்தில் சிஎஸ்கே அணி 180 ரன்கள் கூட தொடாது என்ற இக்கட்டான நிலையில் இருந்தது.
ஆனால் தோனி தன்னுடைய அதிரடியால் சிஎஸ்கேவை சவாலான இலக்கிற்கு கொண்டு சென்று இருக்கிறார். கடந்த போட்டியின் போது வான்கடே மைதானத்தில் ஆர்சிபி 190 ரன்கள்தான் அடித்தது. ஆனால் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. தற்போது சிஎஸ்கே நல்ல சவாலை கொடுத்திருக்கிறது. எனினும் ஆடுகளம் ரன் குவிப்புக்கு சாதகமாக இருப்பதால் மும்பை அணியின் விக்கெட்டும் விரைவில் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே பவுலர்கள் உள்ளனர்.