ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்று பலமான அணியாக விளங்கிய மும்பை இந்தியன்ஸ் தற்போது புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தை பிடித்திருக்கிறது. நடப்பு சீசனில் ஹர்திக் பாண்டியா தலைமையில் களம் இறங்கியது.
மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு தொடரில் ஆறாவது தோல்வியை பெற்றிருக்கிறது. இதை அடுத்து இனி விளையாடப் போகும் அனைத்து போட்டிகளில் வென்றால் மட்டுமே பிளே ஆப் சுற்று என்ற இக்கட்டான நிலை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஏற்பட்டிருக்கிறது.

இனிவரும் போட்டிகளில் ஒன்றில் தோற்றால் கூட இனி மும்பை இந்தியன்ஸ் அணி மற்ற அணிகளை நம்பி தான் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியும். மும்பை இந்தியன்ஸ் அணியின் இந்த அவல நிலைக்கு காரணம். பயிற்சியாளர் மார்க் பவுச்சர் தான் என்று ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பயிற்சியாளராக வந்தவுடன் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து தடுமாறி வருவதாகவும் ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அணியை கட்டமைக்கிறேன் என்ற பெயரில் நல்ல அணியை கெடுத்து விட்டதாகவும் மார்க் பவுச்சர் மீது ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த நிலையில் பயிற்சியாளராக அவர் வந்த பிறகு என்னென்ன தவறு செய்தார் என்பதை தற்போது பார்க்கலாம். மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் வெஸ்ட் இண்டீஸ் வீரர் பொலார்ட். அவர் பேட்டிங், பீல்டிங் என மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய வீரராக திகழ்ந்தார்.
பொலார்ட், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருந்தாலும் தற்போது வரை மற்ற லீக் தொடரில் விளையாடி வருகிறார். ஆனால் ஐபிஎல் தொடரில் பொலார்ட்டை, வேண்டுமென்றே மார்க் பவுச்சர் ஓய்வு பெற வைத்து அணியின் நிர்வாகியாக சேர்த்தார். பொலார்டுக்கு வயதாகி விட்டதால் மாற்று வீரரை தேட வேண்டும் என்று அவர் அதற்கு காரணம் சொன்னார்.
பொலார்ட் சென்றதை அடுத்து அந்த இடத்தில் ஒரு சரியான வீரரை தேர்வு செய்ய முடியாமல் மும்பை தடுமாறி வருகிறது. டிம் டேவிட் அதிரடியாக விளையாடினாலும் பொலார்ட் இடத்தை அவரால் நிரப்பவே முடியவில்லை. இதை போன்று கேமரான் கிரீன், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஒரு நல்ல வீரராக வளர்ந்து வந்தார். ஆனால் அவரை அதிரடியாக நீக்கி ஆர்சிபி அணிக்கு தத்து கொடுத்து விட்டார்.
இதேபோன்று மும்பை இந்தியன்ஸ் அணி தென்னாப்பிரிக்க இளம் வீரர் டிரிஸ்டியன் ஸ்டெப்ஸை வெகுவாக நம்பியிருந்தது. ஆனால் அவரையும் மார்க் பவுச்சர் வேறு அணிக்கு அனுப்பி விட்டார். இதையெல்லாம் விட கேப்டன் பொறுப்பில் இருந்த ரோகித் சர்மாவை நீக்கிவிட்டு ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக மாற்ற மார்க் பவுச்சர் முடிவெடுத்தார். இப்படி மார்க் பவுச்சர் செய்த ஒவ்வொரு தவறும் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பெரும் இடியாக வந்து இறங்கி இருக்கிறது. இதனால் பவுச்சரை மாற்ற வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.