மும்பை: குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியாவை டிரேடிங் முறையில் வாங்க வேண்டுமென்றால், இஷான் கிஷன் அல்லது கேமரூன் க்ரீன் இருவரில் ஒருவரை விடுவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மினி ஏலம் டிசம்பர் 19ஆம் தேதி நடக்கவுள்ளது. இதனால் அனைத்து ஐபிஎல் அணிகளும் தக்க வைக்கப்பட்ட வீரர்கள் மற்றும் விடுவிக்க வீரர்கள் பட்டியலை அறிவிக்க வேண்டும். இதற்கு நாளை மாலை வரை கெடு விதித்து ஐபிஎல் நிர்வாகக் குழு அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அதற்குள் டிரேடிங் முறையில் வீரர்களை ஒப்பந்தம் செய்யவும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை மீண்டும் மும்பை அணிக்கு கொண்டு அந்த அணி நிர்வாகம் முயற்சிகள் மேற்கொண்டு வந்தது. அதன் பலனாக ரூ.15 கோடி ஒப்பந்தத்தின் கீழ் ஹர்திக் பாண்டியாவை குஜராத் அணியிடம் இருந்து மும்பை அணி வாங்கியதாக தெரிய வந்துள்ளது. ஆனால் ரூ.15 கோடி அளவிற்கு தொகை கொடுத்து வாங்கும் அளவிற்கு மும்பை அணியிடம் நிதியில்லை.
ஏனென்றால் கடந்த ஐபிஎல் மினி ஏலத்தில் ஒவ்வொரு அணிகளும் ரூ.95 கோடி வரை செலவழிக்க ஐபிஎல் நிர்வாகக் குழு அனுமதி வழங்கியது. அதில் மும்பை அணி மொத்தமாக ரூ.94.5 கோடிக்கு வீரர்களை ஒப்பந்தம் செய்தது. இதனால் ஹர்திக் பாண்டியாவை மும்பை அணிக்காக ஒப்பந்தம் செய்ய வேண்டுமென்றால், மும்பை அணி தரப்பில் ஏராளமான வீரர்களை விடுவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஆர்ச்சர், ஜோர்டான், ஸ்டப்ஸ், ஷோக்கீன், அர்ஷத் கான், யான்சன் உள்ளிட்ட வீரர்களை விடுவித்தாலும், மும்பை அணிக்கு ரூ. 10.8 கோடியே கிடைக்கும். இதன் மூலம் மொத்தமாக மும்பை அணியின் கையில் ரூ.11.30 கோடி இருக்கும். இந்த தொகையுடனும் ஹர்திக் பாண்டியாவை மும்பை அணியால் வாங்க முடியாது. இதனால் மும்பை அணி தரப்பில் இஷான் கிஷன் அல்லது கேமரூன் க்ரீனை விடுவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஏனென்றால் கேமரூன் க்ரீன் ரூ. 17.5 கோடிக்கும், இஷான் கிஷன் ரூ.15.25 கோடிக்கும் மும்பை அணியால் ஏலத்தில் வாங்கப்பட்டனர். இவர்களில் ஒருவரை விடுவித்தால் மட்டுமே ஹர்திக் பாண்டியாவை ஒப்பந்தம் செய்ய முடியும் என்பதோடு, மினி ஏலத்தில் ரூ.5 கோடியுடன் இளம் வீரர்களையும் வாங்க முடியும். இதனால் மும்பை அணி நிச்சயம் இரு இளம் வீரர்களில் ஒருவரை விடுவிக்கும் முடிவை எடுக்கும் என்று பார்க்கப்படுகிறது.