ஜாம்நகர் : மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் அனைவரையும் ஜாம்நகர்-க்கு டூர்-க்கு அனுப்பி மும்பை அணி நிர்வாகம் வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டுள்ளது.
ஐபிஎல் தொடரின் போது மும்பை அணியின் முன்னாள் வீரர் பொல்லார்ட் மோசமான ஃபார்மில் இருந்தார். 2013ஆம் ஆண்டு சீசனின் போது திடீரென பொல்லார்டை மும்பை அணி நிர்வாகம் விடுமுறை கொடுத்து கோவாவுக்கு டூர் அனுப்பியது. இதனால் சில போட்டிகளை பொல்லார்ட் தவறவிட்டார். ஆனால் கம்பேக் கொடுத்த போது பொல்லார்ட் வேறு மாதிரியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

தற்போது மீண்டும் அதே ஃபார்முலாவை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் கையில் எடுத்துள்ளது. ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி நியமனத்தால் வீரர்களுக்கு இடையே இன்னும் சில மனக்கசப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக பும்ரா, ரோகித் சர்மா, நேஹல் வதேரா, ஆகாஷ் மத்வால், குமார் கார்த்திகேயா உள்ளிட்டோர் பெரிதாக ஆர்வமில்லாமல் இருப்பதாக பார்க்கப்பட்டது.
அதுமட்டுமல்லாமல் மும்பை அணியும் முதல் 3 போட்டிகளில் மோசமான தோல்விகளை சந்தித்துள்ளது. அதிலும் ராஜஸ்தான் அணிக்கு எதிரான தோல்வி அந்த அணி நிர்வாகத்தையும் சேர்த்து கலக்கமடைய செய்துள்ளது. இந்த நிலையில் மும்பை அணி அடுத்த போட்டியை வான்கடே மைதானத்தில் டெல்லி அணியை எதிர்த்து ஏப்ரல் 7ஆம் தேதி விளையாடவுள்ளது.
கிட்டத்தட்ட ஒரு வாரம் வரை இடைவெளி இருப்பதால், மும்பை அணி வீரர்களை மும்பை அணி நிர்வாகம் மொத்தமாக டூர்-க்கு அனுப்பியுள்ளது. அம்பானி மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் நடைபெற்ற ஜாம் நகருக்கு மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் விடுமுறை கொண்டாட்டத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
வழக்கமாக ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா போன்ற அணிகள் பயிற்சியின் போது வீரர்களிடையே நல்ல புரிதல் மற்றும் நட்பு ஏற்படுவதற்காக ட்ரெக்கிங் போன்ற விஷயங்களில் நேரம் செலவிடுவார்கள். அதுபோல் மும்பை அணி நிர்வாகம் வீரர்களிடையே நல்ல நட்பு உருவாகுவதற்கும், பிரச்சனைகளை சரி செய்வதற்கும் விடுமுறைக்கு அனுப்பியுள்ளது. இதனால் மும்பை அணி புதிய எனர்ஜியுடன் கம்பேக் கொடுப்பார்கள் என்று பார்க்கப்படுகிறது.