மும்பை : ஐபில் கிரிக்கெட் தொடரில் ஐந்து முறை கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி தங்களுடைய கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மாவை நீக்கியது மிகவும் தவறு என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து கூறியுள்ளார்.
தற்போது 2024 ஆம் ஆண்டு சீசனில் மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார். இது அந்த அணி ரசிகர்கள் மட்டுமல்லாமல் வீரர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

மும்பை இந்தியன்ஸ் அணி மூன்று போட்டிகளில் தொடர்ந்து தோல்வியை தழுவி இருக்கிறது. இந்த நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து, மும்பை இந்தியன்ஸ் அணியை கடுமையாக தாக்கி பேசியிருக்கிறார். இது குறித்து பேசிய அவர் ரோகித் சர்மா என்பவர் இந்திய கிரிக்கெட் அணியின் ஹீரோ.அவர் இந்திய அணியின் கேப்டனாக இருக்கிறார்.
இந்தியாவுக்கே கேப்டனாக இருக்கும் ஒருவர் எப்படி ஒரு லீக் அணியின் கேப்டனாக இல்லை என்ற விஷயம் யாராலும் ஜீரணித்துக் கொள்ள முடியாது. அவர் அப்படி என்னதான் தவறு செய்தார். இதை தான் ரசிகர்கள் மும்பை இந்தியன்ஸ் அணி மீது கோபமாக இருக்க காரணமாக இருக்கலாம்.
வெற்றி தான் அனைத்துக்குமே பதிலாக இருக்கும். தற்போது மும்பை அணி தொடர்ந்து இரண்டு போட்டிகளில் வென்று இருந்தால் இந்த சத்தமே ஏற்பட்டிருக்காது. இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா தான் டி20 உலக கோப்பையில் செயல்பட போகிறார் என்று அக்டோபர் மாதமே அறிவித்திருந்தால் ரோகித் சர்மாவை மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கும் முடிவை அந்த அணி நிர்வாகம் எடுத்து இருக்காது.
ஏனென்றால் இந்திய அணிக்கு கேப்டனாக இருக்கும் ஒருவரை எப்படி ஒரு லீக் அணியின் கேப்டன் பதவியில் இருந்து தூக்குவது என மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் நிச்சயம் யோசித்து இருக்கும் என்று நவஜோத் சிங் சித்து கூறியுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணி எடுத்திருக்கும் இந்த முடிவு மிகவும் தவறானது என்றும் அவர் சாடியுள்ளார்.