முல்லன்பூர் : மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி வெற்றிபெற 193 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரின் 33வது லீக் போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்த்து மும்பை அணி களமிறங்கியுள்ளது. இந்த போட்டியில் காயம் காரணமாக ஷிகர் தவான் களமிறங்காததால், பஞ்சாப் அணியின் கேப்டனாக சாம் கரண் செயல்பட்டார். இதில் டாஸ் வென்ற சாம் கரண் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் மும்பை அணி சார்பாக வழக்கம் போல் இஷான் கிஷன் - ரோகித் சர்மா கூட்டணி தொடக்கம் கொடுத்தது. பஞ்சாப் அணி தரப்பில் லிவிங்ஸ்டன் முதல் ஓவரை வீசினார்.

அந்த ஓவரிலேயே ரோகித் சர்மா பவுண்டரியை விளாசி அதிரடியாக தொடங்க, அர்ஷ்தீப் சிங் வீசிய 2வது ஓவரில் 2 பவுண்டரிகள் உட்பட 11 ரன்கள் விளாசப்பட்டது. இதன்பின் ரபாடா அட்டாக்கில் கொண்டு வரப்பட்டார். அவரை அட்டாக் செய்ய நினைத்து முதல் பந்திலேயே இஷான் கிஷன் 8 ரன்களில் ஆட்டமிழக்க, உடனடியாக சூர்யகுமார் யாதவ் களமிறங்கினார். இவர்கள் இருவரும் அதிரடியாக ரன்களை குவிக்க தொடங்கினர். இதனால் 6 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 54 ரன்களை சேர்த்தது.
இதனால் சூர்யகுமார் யாதவை கட்டுப்படுத்துவதற்காக ஹர்ப்ரீத் பரார் பவுலிங் செய்ய வந்தார். அவர் வீசிய 7வது ஓவரில் 4 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட, மறுபக்கம் ரபாடாவை மீண்டும் அட்டாக்கில் கொண்டு வந்தார் சாம் கரண். ஆனால் அது பஞ்சாப் அணிக்கு பின்னடைவாக மாறியது. இதன்பின் ஸ்பின்னர்களையும் சூர்யகுமார் யாதவ் பொளந்து கட்ட, 10 ஓவர்கள் முடிவில் மும்பை அணியின் ஸ்கோர் 86 ரன்களாக இருந்தது. சிறப்பாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 34 பந்துகளில் அரைசதம் அடிக்க, மறுமுனையில் ரோகித் சர்மா 36 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதன்பின் திலக் வர்மா - சூர்யகுமார் யாதவ் கூட்டணி இணைந்து அதிரடியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. அர்ஷ்தீப் சிங் வீசிய 15வது ஓவரில் 3 பவுண்டரி உட்பட 15 ரன்கள் சேர்க்கப்ப, தொடர்ந்து ரபாடா வீசிய 16வது ஓவரில் 2 சிக்ஸ் உட்பட 18 ரன்கள் விளாசப்பட்டது. சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் 53 பந்துகளில் 78 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்பின் வந்த ஹர்திக் பாண்டியா 6 பந்துகளில் 10 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதனால் ஃபினிஷிங் பொறுப்பு திலக் வர்மா - டிம் டேவிட் கூட்டணி வசம் சென்றது.
சாம் கரண் வீசிய 19வது ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸ் என்று பொளந்து கட்டிய டிம் டேவிட், ஹர்சல் படேல் வீசிய கடைசி ஓவரின் 2வது பந்தில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அந்த ஓவரின் 5வது பந்தில் ரொமாரியோ ஷெப்பர்ட் 1 ரன்னில் ஆட்டமிழக்க, கடைசி பந்தில் முகமது நபி ரன் அவுட்டாகினார். இதனால் கடைசி ஓவரில் மட்டும் 3 விக்கெட்டுகளை மும்பை அணி பறி கொடுத்தது. இதனால் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 192 ரன்கள் குவித்தது. சிறப்பாக பவுலிங் செய்த ஹர்சல் படேல் 4 ஓவர்களில் 31 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.