மும்பை: டிசம்பர் மாதம் நடக்கவுள்ள ஐபிஎல் மினி ஏலத்தில் 10 அணிகள் பங்கேற்கவுள்ள நிலையில், எந்தெந்த அணிகளிடம் எவ்வளவு பர்ஸ் தொகை மீதமிருக்கிறது என்பதை பார்க்கலாம்.
ஐபிஎல் தொடரில் மினி ஏலம் டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் நடக்கவுள்ளது. இதனையொட்டி அனைத்து அணிகளும் தக்க வைக்கப்பட்ட வீரர்கள் மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. வழக்கமாக தக்க வைக்கப்பட்ட வீரர்கள் பட்டியல் வெளியான பின், வீரர்களை மாற்றி ஒப்பந்தம் செய்து கொள்வதற்கான டிரேடிங் முடிவுக்கு வரும். அதன்பின் எந்த வீரராக இருந்தாலும் ஏலத்தில் தான் வாங்க முடியும்.

ஆனால் தற்போது ஐபிஎல் மினி ஏலம் தொடங்குவதற்கு ஒரு வாரம் முன்பு வரை டிரேடிங் முறை வழக்கத்தில் இருக்கும் என்று ஐபிஎல் நிர்வாக குழு அறிவித்துள்ளது. அதாவது டிரேடிங் முறை ஒப்பந்தம் செய்வதற்கான கடைசி நாளாக டிசம்பர் 12ஆம் தேதி வரை கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான வீரர்களை பல்வேறு அணிகளும் டிரேடிங் செய்ய முயற்சிக்கும் என்று பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ஆர்சிபி அணி தரப்பில் 11 வீரர்களை விடுவித்ததன் மூலமாக ரூ. 40.75 கோடி பர்ஸில் இருக்கும். அதேபோல் மும்பை அணியும் 11 வீரர்களை விடுவித்துள்ளதால், அந்த அணியின் பர்ஸில் ரூ.15.25 கோடி உள்ளது. குஜராத் அணி 8 வீரர்களை விடுவித்துள்ள நிலையில், அந்த அணியின் பர்ஸில் ரூ.13.85 கோடி கையிருப்பு வைத்துள்ளது. லக்னோ அணியும் 8 வீரர்களை விடுவித்துள்ள நிலையில், ரூ.13.9 கோடி பர்ஸில் உள்ளது. ஐதராபாத் அணியை பொறுத்தவரை 6 வீரர்களை விடுவித்துள்ளதால், அந்த அணியிடம் ரூ.34 கோடி கையில் உள்ளது.
அதேபோல் கேகேஆர் அணி 12 வீரர்களை விடுவித்துள்ள நிலையில், அந்த அணியிடம் ரூ. 32.7 கோடி கையில் உள்ளது. சிஎஸ்கே அணியை பொறுத்தவரை 8 வீரர்களை விடுவித்துள்ளதன் மூலமாக ரூ. 31.4 கோடி கையில் வைத்துள்ளது. டெல்லி அணி மொத்தமாக 11 வீரர்களை விடுவித்து மொத்தமாக ரூ.28.95 கோடி கையில் வைத்துள்ளது. ராஜஸ்தான் அணி 9 வீரர்களை விடுவித்து ரூ.14.5 கோடியுடன் ஏலத்தில் பங்கேற்கவுள்ளது. அதேபோல் பஞ்சாப் அணி இம்முறை ரூ.29.1 கோடியுடன் மினி ஏலத்தில் பங்கேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.