சென்னை: ஐபிஎல் ஏலத்தில் அதிக தொகைக்கு செல்ல வேண்டும் என்பதற்காக ஆஸ்திரேலியா அணி வீரர்கள் வேண்டுமென்றே மினி ஏலத்தில் மட்டுமே பங்கேற்பதாக இந்திய அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் துபாயில் உள்ள கோகோ கோலா வளாகத்தில் இன்னும் சில மணி நேரங்களில் தொடங்கவுள்ளது. இந்த மினி ஏலத்தில் மொத்தமாக பல்வேறு நாடுகளை சேர்ந்த 333 வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். அதில் ஆஸ்திரேலியா அணியில் இருந்து மட்டும் 20 வீரர்கள் தங்களின் பெயரை ஏலத்தில் பதிவு செய்துள்ளனர்.

வழக்கமாக ஆஸ்திரேலியா அணியை சேர்ந்த வீரர்கள் ஐபிஎல் மெகா ஏலத்தில் பங்கேற்க மாட்டார்கள். ஐபிஎல் மெகா ஏலம் நடக்கும் போது ஆஷஸ் அல்லது அதிக பணிகள் என்று புதிய காரணங்களை கூறிவிட்டு ஓய்வில் இருப்பார்கள். ஏனென்றால் மெகா ஏலத்தின் போது ஒவ்வொரு அணிகளாலும் 2 அல்லது 3 வீரர்களுக்கு மட்டுமே பெரிய தொகையை கொடுக்க முடியும்.
அதேபோல் வலிமையான இந்திய வீரர்கள் கொண்ட அணியையும் கட்டமைக்க வேண்டும் என்பதால், வெளிநாட்டு வீரர்களுக்கு பெரிய தொகை வழங்கப்படாது. ஆனால் மினி ஏலத்திற்கு வரும் போது ஒவ்வொரு அணிகளும் தங்களின் தேவைக்கேற்ப ஒன்று அல்லது இரண்டு வீரர்களுக்கு அதிக தொகை கொடுக்க முன்வரும். அதேபோல் மினி ஏலத்தில் அதிகளவில் இந்திய அணி வீரர்கள் பங்கேற்க வாய்ப்பில்லை.

ஏனென்றால் பெரும்பாலும் இந்திய அணி வீரர்களை அனைத்து அணிகளும் தக்க வைத்து கொள்ளும். அதனால் வெளிநாட்டு வீரர்களை வாங்கவே அணி நிர்வாகங்கள் முயற்சிகள் மேற்கொள்ளும். இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசுகையில், கிரிக்கெட் வீரர்கள் சம்பாதிக்க வேண்டும் என்பதில் எனக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை. ஏனென்றால் ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் சில ஆண்டுகள் மட்டுமே கிரிக்கெட் விளையாட முடியும்.
ஆனால் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் போது வெளிநாட்டு வீரர்கள் பலரும் சிறிய தொகையுடன் ஐபிஎல் தொடரில் விளையாடுவதில் தயக்கம் காட்டுகிறார்கள் என்று நினைக்கிறேன். அதேபோல் சிறிய தொகைக்கு ஏலம் எடுத்தால், வர முடியாது என்று எளிதாக கூறிவிடுகிறார்கள். குறிப்பாக ஆஸ்திரேலியா வீரர்கள் இப்படி தான் செய்கிறார்கள். மெகா ஏலத்திற்கு வராமல் வேண்டுமென்றே மினி ஏலத்தில் பங்கேற்பதை வாடிக்கையாக வைத்துள்ளார்கள். இதற்கு ஏதாவது கடிவாளம் போட வேண்டும் என்று கூறியுள்ளார்.