பெங்களூரு: குஜராத் அணியிடம் இருந்து ஹர்திக் பாண்டியாவை டிரேட் முறையில் வாங்க மும்பை அணி நிர்வாகம் திணறிய போது, ஆர்சிபி அணி உதவியுள்ள சம்பவம் அந்த ரசிகர்களிடையே விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 16 ஆண்டுகளாக கோப்பையை வெல்ல முடியாமல் திணறி வருகிறது ஆர்சிபி. ஒவ்வொரு முறையும் அணியை மாற்றி மாற்றி கலைத்து மீண்டும் உருவாக்கி வந்ததே ஆர்சிபி அணியால் கோப்பையை வெல்ல முடியாததற்கு காரணமாக அமைந்தது. ஆனால் இம்முறை பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்களில் சரியான வீரர்களை தக்க வைத்து, தேவையில்லாத வீரர்களை விடுவித்துள்ளது.

குறிப்பாக பேட்ஸ்மேன்களை தக்க வைத்ததுடன் ரஜத் படிதர் அணியில் இருக்கிறார். இதனால் ஆர்சிபி அணியின் பேட்டிங் வரிசையில் அபாயகரமானதாக உள்ளது. அதேபோல் பவுலர்களில் சிராஜை தவிர்த்து அத்தனை வீரர்களையும் கழற்றிவிட்டுள்ளது ஆர்சிபி. குறிப்பாக கடந்த ஐபிஎல் தொடரில் அதிக சிக்சர்களை விளாசிய ஹசரங்கா மற்றும் ஹர்சல் படேலை கழற்றிவிட்டுள்ளது.
இதன் மூலமாக ஆர்சிபி அணிக்கு ரூ.40 கோடிக்கும் அதிகமான தொகையில் கையிருப்பில் இருந்தது. இதன் மூலம் பெங்களூரு மைதானத்திற்கு ஏற்ப ஸ்பின்னர்கள் மற்றும் வேகப்பந்துவீச்சாளர்களை தாராளமாக வாங்க முடியும். ஆனால் தேவையின்றி மும்பை அணியிடம் இருந்து கேமரூன் க்ரீனை டிரேடிங் முறையில் ஆர்சிபி அணி ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் ரூ.17.25 கோடியை ஆர்சிபி அணி இழந்துள்ளது.
இதனால் தரமான பவுலர்கள் மற்றும் அவர்களுக்கான பேக் அப் வீரர்களை வாங்குவதற்கு ரூ.23.25 கோடி மட்டுமே ஆர்சிபி அணியின் கைகளில் உள்ளது. இதன் மூலம் மினி ஏலத்தில் தேவையான வீரர்களை வாங்க முடியும் என்றாலும், மும்பை அணியை பலவீனப்படுத்தும் வாய்ப்பை ஆர்சிபி அணி கோட்டைவிட்டுள்ளது. இதன் மூலம் மும்பை அணிக்கு கூடுதல் சாதகத்தை ஆர்சிபி நிர்வாகம் ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரின் வெற்றியில் மினி ஏலத்தின் நிர்வாகங்களின் செயல்பாடுகளும் மிக முக்கிய காரணம். தங்கள் அணிக்காக வீரர்களை வாங்குவதுடன், எதிரணிகளுக்கு தேவையான வீரர்களை எடுக்க விடாதபடியும் செயல்பட வேண்டும். ஹர்திக் பாண்டியாவை வாங்க மும்பை அணியிடம் பணமில்லாமல் இருந்த சூழலில், கேமரூன் க்ரீனை வாங்கி சொந்த காசில் ஆர்சிபி அணி சூனியம் வைத்து கொண்டுள்ளதாகவே பார்க்கப்படுகிறது.