சென்னை : 2013ஆம் ஆண்டு மும்பை அணி கொடுத்த மிகப்பெரிய ஆஃபரை தவறவிட்டதை நினைத்து வருந்துவதாக ஆர்சிபி அணி வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடருடன் ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் தினேஷ் கார்த்திக் ஓய்வை அறிவித்துள்ளார். முதல் ஐபிஎல் தொடர் தொடங்கி 17 சீசன்களாக தொடர்ந்து விளையாடியுள்ள தினேஷ் கார்த்திக், இதுவரை ஐபிஎல் வரலாற்றில் 2 போட்டிகளை மட்டுமே தவறவிட்டுள்ளார். அதேபோல் டெல்லி, ஆர்சிபி, கேகேஆர், மும்பை, குஜராத் உள்ளிட்ட அணிகளுக்காக விளையாடியவர்.

இந்த நிலையில் தமிழக வீரர் அஸ்வினுக்கு தினேஷ் கார்த்திக் அளித்துள்ள பேட்டியில், எனது வாழ்க்கையில் கிரிக்கெட் பயணம் ஏற்ற இறக்கங்களுடன் தான் இருந்துள்ளது. ஆனால் அதனை நினைத்து வருத்தப்படுபவன் அல்ல. ஆனால் 2 விஷயங்களுக்காக மட்டும் இப்போதும் வருந்துகிறேன். அதில் ஒன்று மும்பை அணி கொடுத்த மெகா ஆஃபரை வேண்டாமென்று துறந்து வெளியில் வந்தேன்.
2013ஆம் ஆண்டு மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்ற போது, மும்பை அணியில் நம்பர் 3 வீரராக விளையாடினேன். அந்த சீசனில் நீடா அம்பானி, ஆகாஷ் அம்பானி, அனந்த் உள்ளிட்ட மும்பை அணியின் உரிமையாளர்கள் அனைவரும் என்னுடன் சிறப்பாக பழகினார்கள். மெகா ஏலத்திற்கு முன்பாக மும்பை அணி நிர்வாகம் என்னை தக்க வைக்க விரும்பியது.
என்னை பொறுத்தவரை மும்பை அணியில் நீடித்திருந்தால், நான் இன்னும் நல்ல கிரிக்கெட் வீரராக இருந்திருப்பேன். ஏனென்றால் கூக்குபரா பந்தில் பயிற்சி செய்ய முடியும். ஏன் சொல்கிறேன் என்றால், ஒரு கூக்குபரா பந்தின் விலை ரூ.15 ஆயிரம். ஒருநாள் பயிற்சிக்கு பந்திற்காக மட்டும் ரூ.4 லட்சம் வரை செலவு செய்ய தயங்க மாட்டார்கள். அங்கு இருந்திருந்தால் எனது கிரிக்கெட் பாதையும் முன்னேற்றம் கண்டிருக்கும் என்று நினைக்கிறேன்.
இன்னொரு விஷயம், சிஎஸ்கே அணிக்காக விளையாட முடியாதது வருத்தமளிக்கிறது. ஒவ்வொரு முறையும் என்னை ஏலத்தில் வாங்க முயற்சிப்பார்கள். அதற்காக என்றும் மரியாதை இருக்கிறது. 2008ல் நான் விபி சந்திரசேகர் என்னை வாங்குவார் என்று நம்பியிருந்தேன். ஏனென்றால் விபி சந்திரசேகருக்கு என்னை மிகவும் பிடிக்கும். தமிழ்நாடு, இந்தியா ஏ அணிகளுக்கு என்னை தேர்வு செய்தது அவர் தான்.
ஆனால் ஏலத்தின் போது சிஎஸ்கே அணி தோனியை வாங்கிய போது, தான் ஐபிஎல் தொடரை புரிந்து கொள்ள முடிந்தது. ஒருவேளை விபி சந்திரசேகர் உயிருடன் இருந்திருந்தால் நிச்சயம் அவருக்கு செல்ஃபோன் மூலம் அழைத்து கேட்டிருப்பேன். ஏன் என்னை வாங்கவில்லை என்று.. ஆனால் அவருக்கு என்றும் நன்றிக்கடன்பட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.