அகமதாபாத் : விராட் கோலியின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதன் காரணமாக எலிமினேட்டர் போட்டிக்கான பயிற்சியை ஆர்சிபி அணி ரத்து செய்துள்ளது தெரிய வந்துள்ளது.
ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றில் நடக்கவுள்ள எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் அணியை எதிர்த்து ஆர்சிபி அணி விளையாடவுள்ளது. அகமதாபாத் மைதானத்தில் நடக்கவுள்ள இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எகிறியுள்ளது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக இரு அணிகளும் அகமதாபாத்தில் முகாமிட்டுள்ளனர்.

இந்த நிலையில் ஆர்சிபி அணியின் பயிற்சி மற்றும் செய்தியாளர் சந்திப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இரு அணிகளுக்குமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குஜராத் காவல்துறையினர் சார்பாக அகமதாபாத்தில் 4 பேர் சந்தேகத்திற்கிடமான வகையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பின்னர் அவர்கள் தங்கியிருந்த இடத்தை சோதனை செய்த போது, ஆயுதங்கள், சந்தேகத்திடமான வீடியோ மற்றும் மெசேஜ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரு அணிகளின் நிர்வாகங்களுக்கும் குஜராத் காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அகமதாபாத் காவல்துறை அதிகாரியான விஜய்குமார் ஜுவாலா கூறுகையில், அகமதாபாத் வந்த பின் 4 பேர் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து விராட் கோலியிடம் அறிவுறுத்தப்பட்டது. விராட் கோலி இந்திய நாட்டின் முக்கிய நபர். அவருக்கு பாதுகாப்பு அளிப்பது எங்களின் முக்கிய பணி என்று தெரிவித்துள்ளார்.
விராட் கோலிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால், ஆர்சிபி அணி பயிற்சியை ரத்து செய்துள்ளது. அதேபோல் ராஜஸ்தான் அணியின் வீரர்களும் பயிற்சிக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் ஆர்சிபி அணி வீரர்கள் தங்கியுள்ள ஹோட்டல்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அவர்களை சந்திக்க முக்கிய நிர்வாகிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வருவதும் தெரிய வந்துள்ளது.