அகமதாபாத் : ராஜஸ்தான் அணிக்கு எதிரான நாக் அவுட் போட்டியில் ஆர்சிபி அணியின் விராட் கோலி மீண்டும் சொதப்பியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றில் நடந்து வரும் எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் அணியை எதிர்த்து ஆர்சிபி அணி களமிறங்கியுள்ளது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன் விராட் கோலியை ரசிகர்கள் பலரும் கிண்டல் செய்து வந்தனர். ஏனென்றால் நட்சத்திர வீரர் விராட் கோலி பிளே ஆஃப் சுற்றில் இதுவரை ஒரு முறை கூட அரைசதம் அடித்ததில்லை.

அதிகபட்சமாக 2021ஆம் ஆண்டு கேகேஆர் அணிக்கு எதிராக 39 ரன்கள் சேர்த்ததே விராட் கோலியின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. இதனால் மோசமான சாதனையை மாற்றுவாரா என்ற ரசிகர்களின் கேள்வியுடன் விராட் கோலி களம் புகுந்தார். இவரின் விக்கெட்டை வீழ்த்துவதற்காக ராஜஸ்தான் அணி போல்ட்-ஐ வைத்து அட்டாக் செய்தது.
இதனையறிந்த விராட் கோலி, போல்ட்-ஐ தவிர்த்து மற்ற அனைத்து பவுலர்களையும் பொளந்து கட்டினார். சந்தீப் சர்மாவின் ஸ்விங்கை கணித்து க்ரீஸில் இருந்து ஸ்டெப் அவுட் செய்து பவுண்டரிகளை விளாசினார். இதனால் சஞ்சு சாம்சன் ஸ்டம்பிற்கு அருகில் வந்து விக்கெட் கீப்பிங் செய்த போதும், விராட் கோலி பவுண்டரி அடிப்பதை தடுக்க முடியவில்லை.
விராட் கோலியின் அதிரடி ஆட்டம் காரணமாக ஆர்சிபி அணி பவர் பிளே ஓவர்கள் முடிவில் 50 ரன்களை சேர்த்தது. இதன்பின் சஞ்சு சாம்சன் உடனடியாக ஸ்பின்னர்களை அட்டாக்கில் கொண்டு வந்தார். அஸ்வினை கவனமாக எதிர்கொண்ட விராட் கோலி, சாஹலை அட்டாக் செய்யும் நோக்கத்துடன் பேட்டிங் செய்தார்.
இதனால் சாஹல் வீசிய 2வது பந்திலேயே சிக்ஸ் அடிக்க முயற்சித்த போது, பவுண்டரி லைனில் நின்றிருந்த ஃபெரேரா எளிதாக கேட்ச் பிடித்தார். இதனால் விராட் கோலி 24 பந்துகளில் ஒரு சிக்ஸ், 3 பவுண்டரி உட்பட 33 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன் மூலம் மீண்டும் நாக் அவுட் போட்டியில் விராட் கோலி சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெளியேறி இருக்கிறார்.
ஐபிஎல் வரலாற்றில் 9 முறை ஆர்சிபி அணி பிளே ஆஃப் மற்றும் அரையிறுதி போட்டிகளில் விளையாடி இருக்கிறது. அதில் மொத்தமாக 15 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 2 அரைசதங்கள் உட்பட 341 ரன்களை மட்டுமே குவித்துள்ளார். நாக் அவுட் போட்டிகளில் விராட் கோலியின் பேட்டிங் சராசரி 26.22 ஆக மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது.