மும்பை : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசன் ஆரம்பிப்பதற்கு முன் பல திருப்புமுனைகளையும் பரபரப்புகளையும் கிளப்பி இருக்கிறது. குஜராத் அணியிலிருந்து மும்பைக்கு ஹர்திக் பாண்டியா திரும்பியதே இந்த பரபரப்புக்கு காரணம்.
தங்களுடைய அடுத்த கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை அடையாளம் கண்டு மும்பை அணி இந்த முயற்சியை எடுத்து இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இது அணியில் இருக்கும் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளருக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்திருப்பதாகவும் அதனால் அவர் சமூக வலைத்தளத்தில் மறைமுகமாக பதிவு போட்டு இருப்பதாகவும் ரசிகர்கள் கருதுகின்றனர்.

ஒரு காலத்தில் நன்றி உணர்வு, விசுவாசம் போன்ற விலை உயர்ந்த குணங்கள் கடந்த தலைமுறை மக்களிடம் இருந்தது. ஆனால் இப்போது தன்னலமும் சுயநலமும் தான் ஓங்கி இருக்கிறது. ஐபிஎல் தொடரில் மும்பை அணி இல்லை என்றால் பும்ராவால் இந்திய கிரிக்கெட் அணி பக்கமே வந்திருக்க முடியாது. இதே நிலைதான் ஹர்திக் பாண்டியாவுக்கும்.
ஆனால் இருவரும் தாங்கள் வளர்ந்த பிறகு தங்களுடைய சொந்த அணி குறித்து பல மறைமுக கருத்துகளை வெளிப்படையாக கூறி வருகிறார்கள். இதற்குப் பின்னால் கேப்டன் பதவி கிடைக்கவில்லை என்ற காரணம் மட்டும் கிடையாது. உண்மையான காரணமே பணமும் கேப்டன் பதவியால் கிடைக்கும் மரியாதையும் தான்.
உதாரணத்திற்கு ஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொரு மதிப்பு இருக்கிறது. சாதாரணமாக கிரிக்கெட் விளையாடும் ஒரு வீரருக்கும் அணியின் கேப்டனுக்கும் விளம்பர சந்தையில் ஒரு விலை இருக்கிறது. இதனால் தான் கேப்டனாக ஒரு அணியில் வருவதற்கு பலரும் அடித்துக் கொள்கிறார்கள். மும்பை அணியின் கேப்டனாக பும்ரா செயல்பட்டு அவர் விளம்பர படங்களில் நடித்தால் அவருடைய வருமானம் பல மடங்கு உயரும்.
மேலும் மும்பை அணியின் விளம்பரத்திற்கும் பும்ராவை அழைப்பார்கள். அதற்கென தனி சம்பளம் கிடைக்கும். இதனால்தான் ஐபிஎல்லில் விளையாடும் ஒவ்வொரு இளம் வீரர்களும் எப்படியாவது கேப்டனாக மாறிவிட வேண்டும். கோடியில் புரள வேண்டும் என நினைக்கிறார்கள். தங்களுக்கு நினைத்தது கிடைக்கவில்லை என்று தெரிந்தவுடன் தங்களை அடையாளம் கண்டுபிடித்து வளர்த்த அணியே தூக்கி எறிகிறார்கள்.
அணியில் மொத்தமே 11 வீரர்கள் தான் விளையாட முடியும். அதில் கேப்டன் மற்றும் துணை கேப்டன் இரண்டு பேர் தான் இருக்க முடியும். ஆனால் தற்போதைய சூழலில் விளையாடும் 11 வீரர்களும் தாங்கள் தான் கேப்டன் ஆக வேண்டும் என நினைக்கிறார்கள். இது அபாயகரமான சூழலை இந்திய கிரிக்கெட்டில் உருவாக்கும் என்ற கவலை ரசிகர்களுக்கு அளிக்கிறது.